அணுசக்தியும் புவி வெப்பமயமாதலும் 3: சூழலுக்கு இசைவானது எது?

புவி வெப்பமயமாதல், காலநிலை மாற்றம் ஆகியவை குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி வரும் விஞ்ஞானிகளில் முக்கியமானவர் அமெரிக்காவைச் சேர்ந்த ஜேம்ஸ் ஹான்ஸன். காலநிலை மாற்றம் தொடர்பான அவரது களப்பணிக்காக பல முறை கைது செய்யப்பட்டிருக்கிறார்.

நவம்பர் மாதம் முதல் வாரத்தில் அவரோடு, காலநிலை மாற்றம் சார்ந்த மேலும் மூன்று நிபுணர்களும் சேர்ந்து, அணுசக்தி வேண்டாம் என்று சொல்லும் அதிகார வர்க்கத்தினருக்கு ஒரு கடிதம் எழுதியிருக்கிறார்கள். காலநிலை மாற்றத்தின் வேகத்தைக் குறைக்க அணுசக்தியை பயன்படுத்த வேண்டும் என்பதுதான் கடிதத்தின் சாராம்சம்.

இங்கிலாந்தைச் சேர்ந்த விஞ்ஞானியும் களப்பணியாளருமான ஜார்ஜ் மானிபாட் தீவிர அணுசக்தி எதிர்ப்பாளராக இருந்தவர். இப்போது அவர் அணுசக்தியை ஆதரிக்கிறார். காரணம்: காலநிலை மாற்றம். “ஆபத்து இல்லாத மாற்றுகள் இருக்குமானால் அணுசக்தியை முற்றிலும் ஒழித்துவிடலாம். ஆனால் முழுமையான தீர்வு என்ற ஒன்று இல்லை” என்கிறார் அவர்.

காலநிலை மாற்றம், புவி வெப்பமயமாதல் ஆகியவற்றை அணுசக்தி குறைக்க உதவும் என்று இவர்கள் எப்படிச் சொல்கிறார்கள்? பிற எரிசக்திகளோடு ஒப்பிடும்போது அணுசக்தி, காற்று சக்தி மற்றும் சூரிய சக்தியை உற்பத்தி செய்யும் போது நிகழும் பசுமையில்ல வாயுக்களின் வெளியேற்றம் மிகவும் குறைவு என்றுச் சொல்லப்படுகிறது.

மரபு சார்ந்த எரிசக்தி உற்பத்திக்குப் பயன்படும் பிற தொழில்நுட்பங்களால் (உதாரணம்: நிலக்கரி) உருவாகும் பசுமையில்ல வாயுகளின் வெளியீடு மிக அதிகமெனவும், அதனால் காலநிலை மாற்றம் வேகமடைவதாகவும் விஞ்ஞானிகளும் அணுசக்திக்கு ஆதரவான சூழலியலாளர்களும் சொல்கிறார்கள். காற்று, சூரியசக்தி போன்ற மாற்று எரிசக்திகளிலும் இந்த பசுமையில்ல வாயுக்கள் வெளியீடு பிரச்சினை இல்லை. ஆனால், நிரந்தரமான எரிசக்தி உற்பத்திக்கு காற்றையும், சூரியசக்தியையும் நம்பியிருக்க முடியாது என்று அவர்கள் வாதிடுகிறார்கள்.

சர்வதேச அணுசக்தி கழகம் (international atomic energy agency) தன்னுடைய அறிக்கை ஒன்றில் 2030க்குள் கார்பன் டை ஆக்சைட் வெளியேற்றம் மிக அதிக அளவில் உயர்ந்திருக்கும் என்று சொல்கிறது. பசுமையில்ல வாயுக்களின் வெளியிட்டை 2050-க்குள் 50 முதல் 85 சதவிகிதம் வரை மாற்றவில்லையென்றால் காலநிலை மாற்றத்தால் கடுமையான விளைவுகளை உலகம் சந்திக்க வேண்டியிருக்கும் என்று கழகம் சொல்கிறது. புகுஷிமா விபத்திற்கு பிறகான அறிக்கை ஒன்றிலும் இதே கருத்தை வலியுறுத்துகிறது சர்வதேச அணுசக்தி கழகம்.

விபத்திற்கு பிறகான ஆண்டு அறிக்கையில் “சர்வதேச எரிசக்தி தேவைகளை சந்திக்கும் அதேவேளையில், எதிர்காலத்தில் பசுமையில்ல வாயுக்களின் வெளியீட்டை கட்டுப்படுத்துவதிலும் அணுசக்திக்கு முக்கிய பங்கு உண்டு. அணு உலைகளின் செயல்பாட்டின்போது எந்தவிதமான பசுமையில்ல வாயுக்களின் வெளியீடும் நிகழ்வதில்லை. ஆயுள் வட்டத்தில் அது வெளியிடும் பசுமையில்ல வாயுக்களின் எண்ணிக்கை மிக மிக குறைந்த அளவிலேயே இருக்கிறது” என்று சொல்லியிருக்கிறது. அதேசமயம் பாதுகாப்பு நடவடிக்கைகளை பலப்படுத்த வேண்டும் எனவும் அது சொல்லியிருக்கிறது.

மொத்தத்தில் அணுசக்தி சூழலுக்கு இசைவான ஒன்று என்று ஒரு தரப்பினர் பிரச்சாரம் செய்து வருகிறார்கள்.

இப்படி காலநிலை மாற்றத்துக்கான பதிலாக அணுசக்தியை முன்னிறுத்தும் குரல்கள் அவற்றின் பிற அபாயங்களை பார்ப்பதில்லை என்று சொல்கிறார்கள் மற்றொரு தரப்பினர். அணுசக்தி ஆதரவாளர்கள் முன்னிறுத்துவது போல அது சூழலுக்கு இசைவான ஒன்று இல்லை என்கிறார்கள் அவர்கள்.

ஹான்சன், மானிபாட் போல அணுசக்திக்கு எதிரான தரப்பினரும் வலிமையானவர்களாகவே இருக்கிறார்கள். அவர்கள் யார்? அவர்களது வாதம் என்ன?

அணுசக்தியை மாற்றாக முன்னிறுத்தும் சர்வதேச அணுசக்தி கழகம் எரிசக்தி செயல்திறன் பற்றி என்ன சொல்கிறது?

விரிவாகப் பார்ப்போம்.

http://tamil.thehindu.com/general/environment/%E0%AE%85%E0%AE%A3%E0%AF%81%E0%AE%9A%E0%AE%95%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BF-%E0%AE%B5%E0%AF%86%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%AE%E0%AE%AF%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-3-%E0%AE%9A%E0%AF%82%E0%AE%B4%E0%AE%B2%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%87%E0%AE%9A%E0%AF%88%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%8E%E0%AE%A4%E0%AF%81/article5392991.ece?homepage=true

 

அணுசக்தியும் புவி வெப்பமயமாதலும் 2: காலநிலை மாற்றம்

Will nuclear energy help combat climate change?

காலநிலை மாற்றம் (Climate change) என்பது இன்று பல ஊடகங்களிலும் அடிக்கடி பயன்படுத்தப்படும் ஒரு சொல். குறிப்பிட்ட ஒரு காலக்கட்டத்தில் காலநிலை அளவீடுகளில் ஏற்படும் குறிப்பிடத்தக்க மாற்றங்களையே காலநிலை மாற்றம் என்கிறார்கள். இன்று சுற்றுச்சூழலில் ஏற்படும் பல மாற்றங்களுக்கு இந்த காலநிலை மாற்றமும் ஒரு முக்கியமான காரணம்.

நதிகள் வற்றிப்போவதற்கும், மழை பொய்த்துப் போவதற்கும் எதிர்பாராத சமயங்களில் மழை பெய்வதற்கும் காலநிலை மாற்றம் முக்கியமான காரணம் என்று அறியப்பட்டிருக்கிறது.

கடந்த நூற்றாண்டில்தான் காலநிலை மாற்றத்தின் தாக்கம் கடுமையாக உணரப்பட்டிருக்கிறது. வரும் நாட்களில் காலநிலை மாற்றம் சர்வதேச சமூகம் சந்திக்கக்கூடிய ஒரு முக்கிய பிரச்சினையாக உருவெடுத்துக்கொண்டிருக்கிறது. காலநிலை மாற்றம், பொருளாதார வளர்ச்சிக்குக்கூட சவாலாக அமையும் என்று சமீபத்தில் வெளியான ஓர் ஆய்வு சொல்கிறது.

இந்தக் காலநிலை மாற்றத்திற்கான காரணங்கள் என்ன?

இன்றைக்கு காலநிலை மாற்றம் உருவாக இயற்கைக் காரணங்கள் தவிர, மனித செயல்பாடுகளே பெருமளவில் காரணமாக இருக்கின்றன. குறிப்பாக மனித செயல்பாடுகளால் பூமி வேகமாக வெப்பமடைவதும் முக்கியமான காரணம்.

பூமியின் மேற்பரப்பில் ஒரு படலம் போல இருக்கும் பசுங்குடில் வாயுக்கள் (Greenhouse Gases) அதிகரித்துக் கொண்டிருக்கின்றன. இதனால், இந்த வாயுக்கள் கிரகிக்கித்துக்கொள்ளும் சூரிய வெப்பத்தின் அளவும் அதிகரித்துக் கொண்டிருக்கிறது. பசுங்குடில் வாயுக்களின் அடர்த்தி அதிகரிக்க மனித செயல்பாடுகளே காரணம் என்று கண்டுபிடிக்கப்பட்டிருக்கிறது. புதைப்படிம எரிப்பொருட்களை எரிப்பது, அவற்றின் மூலம் மின்சாரம் தயாரிப்பது, உரங்களைப் பயன்படுத்துவது, காடுகளை அழிப்பது, மரங்களை வெட்டுவது உள்ளிட்ட பல மனித செயல்பாடுகளால் பசுங்குடில் வாயுக்களின் அடர்த்தி அதிகரித்து, புவி வேகமாக வெப்பமடைந்து வருகிறது.

தீர்வு நோக்கி…

இப்போது சர்வதேச சமூகத்தின் முன்பு இருக்கும் மிகப்பெரிய சவால், புவி வெப்பமடைதல்தான். இந்தச் சவாலை எதிர்கொள்ள ஐ.நாவின் இரு உறுப்பு அமைப்புகள் இணைந்து காலநிலை மாற்ற பன்னாட்டு அரசுக்குழு (Intergovernmental panel on climate change – IPCC) ஒன்றை அமைத்தன. 1988ல் அமைக்கப்பட்ட இந்த குழுவில் உலக நாடுகளின் பிரதிநிதிகள், அறிவியலாளர்கள் இடம்பெற்றார்கள்.

 

இதனடிப்படையில் 2008 முதல் 2012 வரையிலும், பின்னர் 2013 முதல் 2020 வரை இரண்டு கட்டங்களாக வளர்ந்த நாடுகள் பசுங்குடில் வாயுக்களின் வெளியீட்டை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தன. வளரும் நாடுகளுக்கு காலக்கெடு எதுவும் இல்லையென்றாலும், அவையும் பசுங்குடில் வாயுக்களின் வெளியீட்டை குறைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

கியோட்டோ உடன்படிக்கையின் கீழ் வளர்ந்த நாடுகளுக்கு வழங்கப்பட்ட சலுகைகளில் ஒன்று தூய்மை வளர்ச்சி முறை (clean development mechanism). இந்தச் சலுகையின் கீழ் வளர்ந்த நாடுகள், வளரும் நாடுகளில் பசுங்குடில் வாயு வெளியீட்டை குறைக்கும் திட்டங்களில் முதலீடு செய்யலாம்.

சூரிய சக்தி, காற்று சக்தி போன்றவை அடிப்படையிலான மின்திட்டங்கள் தூய்மை வளர்ச்சி முறையின் கீழ் வரும். ஆரம்பம் முதலே அணுசக்தி தூய்மை வளர்ச்சி முறையின் கீழ் வராது. ஆனால், இப்போது அணுசக்தியையும் அதில் இணைக்க வேண்டும் என்று ஒரு சாரார் கோரிக்கை வைக்கத் துவங்கியிருக்கின்றனர். பிற மாற்றுசக்திகளைவிட அணுசக்தி சூழலுக்கு இசைவானது என்பது அவர்கள் முன் வைக்கும் வாதம். இந்த வாதத்தை வேறொரு சாரார் முற்றிலுமாக நிராகரித்து வருகின்றனர்.

உயிருக்கு உலை வைக்கக்கூடியது என்று கருதப்படும் அணுசக்தி எப்படி சூழலுக்கு இசைவான ஒன்றாக இருக்க முடியும்? அவர்கள் சொல்லும் காரணங்கள் என்ன? இதற்கு எதிர் தரப்பினர் என்ன பதில் சொல்கிறார்கள்? பார்ப்போம்.

(தொடரும்)

 

http://tamil.thehindu.com/general/environment/%E0%AE%85%E0%AE%A3%E0%AF%81%E0%AE%9A%E0%AE%95%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BF-%E0%AE%B5%E0%AF%86%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%AE%E0%AE%AF%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-2-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%AE%E0%AF%8D/article5343509.ece

அணு சக்தியும் புவி வெப்பமயமாதலும் 1 : ஆஸ்திரேலிய அரசியல்

A weekly serial on The Hindu Tamil Website on nuclear energy and climate change, the debate that surrounds issue. The first part of the serial speaks about Australia’s pro-nuclear lobby exerting pressure on  the government  to go nuke to fight climate change. Will it help?

http://tamil.thehindu.com/general/environment/%E0%AE%85%E0%AE%A3%E0%AF%81-%E0%AE%9A%E0%AE%95%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BF-%E0%AE%B5%E0%AF%86%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%AE%E0%AE%AF%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-1-%E0%AE%86%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%87%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D/article5313982.ece

அணு சக்தியை முற்றிலும் ஒழித்துவிட்ட நாடுகளில் முக்கியமானது ஆஸ்திரேலியா. அந்நாட்டின் அணு சக்தி எதிர்ப்பு இயக்கத்திற்கு மிகப்பெரிய வரலாறு இருக்கிறது. 1970களில் பசிபிக் பெருங்கடலில் நடந்த பிரெஞ்ச் அணு சக்தி சோதனையையொட்டி உருவான விவாதங்கள், அந்த எதிர்ப்பிற்கு அடித்தளமாக இருந்தன. யுரேனியம் உற்பத்தியில் உலக அளவில் மூன்றாவது பெரிய நாடாக இருந்த போதிலும், அதன் சுரங்கவியல் பலத்த சர்ச்சைகளையே உருவாக்கியிருக்கிறது.

வரலாற்றுப்பூர்வமாகவே ஆஸ்திரேலியாப் பொருத்தவரை அணு சக்தி ஒரு முக்கியமான அரசியல் பிரச்சினையாகவும் இருந்து வந்திருக்கிறது. நவம்பர் 2007ல் நடந்த தேர்தலில் அணு சக்திக்கு எதிரான உழைப்பாளர் கட்சியும், அணு சக்திக்கு ஆதரவான ஜான் ஹோவர்ட் தலைமையிலான கூட்டணியும் மோதின. தேர்தலில் உழைப்பாளர் கட்சியே வெற்றிப் பெற்றது.

இந்த பின்னணியில்தான் இப்போது அணு சக்திக்கு ஆதரவான குரல்கள் ஆஸ்திரேலியாவில் ஓங்கி ஒலித்துக்கொண்டிருகின்றன. அணு சக்திக்கு எதிரான நிலைப்பாட்டை ஆஸ்திரேலியா மாற்றிகொள்ள வேண்டுமென்று விஞ்ஞானிகள் முதல் அரசியல்வாதிகள் வரை கோரத் துவங்கியிருக்கிறார்கள்.

2003க்குப் பிறகு ஒலிக்கத் தொடங்கிய இந்த குரல்கள் புகுஷிமாவிற்கு பிறகும் தமது வலுவை இழக்கவில்லை. ஐரோப்பாவிலுள்ள பல நாடுகள் பல தசாப்தங்களாக தமது தேவைகளுக்கு அணு சக்தியை நம்பியிருப்பதை சுட்டிகாட்டும் இவர்கள், அணு சக்தியை தேர்ந்தெடுக்காததன் மூலம் ஆஸ்திரேலியா பின் தங்கிவிடும் என்று அச்சுறுத்துகிறார்கள்.

விஞ்ஞானிகளிலேயே ஒரு சாரார் அணு சக்தி வேண்டுமெனவும் ஒரு சாரார் ஆஸ்திரேலியாவில் மாற்று எரிசக்தி அதிக அளவில் இருப்பதால் வேண்டாம் எனவும் பிரிந்திருக்கின்றனர். டிட்டர்டன், பாக்ஸ்டர், பாரி ப்ரூக் போன்ற ஆஸ்திரிலேயாவின் முக்கியமான விஞ்ஞானிகள் அந்நாடு அணு சக்தியை அனுமதிக்க வேண்டும் என்று தொடர்ந்து வலியுறுத்தியவர்கள். மாறாக, பிளானரி போன்ற விஞ்ஞானிகள் ஆஸ்திரேலியாவில் மாற்று எரிபொருள் மிக அதிக அளவில் இருப்பதால் அணு சக்தியை உபயோகப்படுத்த வேண்டிய தேவை இல்லை என்று சொல்கிறார்கள். ஆனால் பிளானரி, மாற்று எரிபொருள் இல்லாத நாடுகளுக்கு ஆஸ்திரேலியா யுரேனியம் கொடுக்க வேண்டும் என்று சொல்கிறார்.

இப்படி அணு சக்திக்கு ஆதரவான குரல்கள் அதற்கு பல காரணங்களைச் சொல்கின்றன. அணு சக்தியினால் ஏற்படக்கூடிய ஆபத்துகள் மிகைப்படுத்தப்பட்டுவிட்டதாக அவர்கள் சொல்கிறார்கள். புகுஷிமா விபத்திற்கு பிறகு அணு சக்தி கதிர்வீச்சினால் உயிரிழந்த சம்பவம் பெரிதும் இல்லை என்கிறார் ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த விஞ்ஞானி பின்கெல். கதிர்வீச்சால் கான்சர் உண்டாகும் அபாயமும் மிகமிக குறைந்த அளவிலேயே இருப்பதாக அவர் வாதிடுகிறார்.

ஆனால், அணு சக்திக்கு ஆதரவானவர்கள் முன் வைக்கும் ஒரு முக்கியமான வாதம், காலநிலை மாற்றம் சார்ந்தது.

அணு சக்தியை தவிர்ப்பதன் மூலம் புவி வெப்பமயமாதல் பிரச்சினைக்கு எதிரான போராட்டத்தில் மற்ற உலக நாடுகளை காட்டிலும் ஆஸ்திரேலியா பின் தங்கிவிடும் வாய்ப்புகள் அதிகம் இருப்பதாக அவர்கள் சொல்கிறார்கள். கார்பன் வெளியேற்றத்தைத் தடுக்க சூரியசக்தி அல்லது காற்று சக்தியை விட அணு சக்தியே சிறந்தது என்பது இவர்கள் வைக்கும் வாதம்.

இது ஆஸ்திரிலேயாவின் பிரச்சினை மட்டுமல்ல. கியோட்டோ உடன்படிக்கையின் கீழ் அணு சக்தியை சேர்க்கலாமா வேண்டாமா என்பது இன்று உலக அளவில் நடந்து கொண்டிருக்கும் ஒரு விவாதம்.

உலகிலுள்ள விஞ்ஞானிகள் இந்த சர்ச்சையில் இரண்டு பிரிவினராக பிரிந்து எதிரெதிர் நிலையில் இருக்கிறார்கள். கியோட்டோ உடன்படிக்கையின் முக்கியத்துவம், புவி வெப்பமயமாதல் பிரச்சினையில் அணு சக்திக்கு ஆதரவாகவும் எதிராகவும் வைக்கப்படும் வாதங்கள் எல்லாவற்றையும் ஒன்றொன்றாகப் பார்ப்போம்.

(தொடரும்)

கவிதா முரளிதரன் – தொடர்புக்கு kavitha.m@kslmedia.in