TN farmers adopt to climate change with cultivation of traditional varieties of rice

Summary: Other parts of Tamil Nadu including Cauvery Delta, the cultivation of rice is shrinking due to changes in rainfall pattern and water supply for irrigation. So, Some of the farmers in Tamil Nadu are started cultivating the traditional varieties of rice which is drought-resistant and pest-resistant. These farmers wants the Government support for the cultivation of traditional varieties of rice.

பாரம்பரிய நெல் ரகங்களைப் பாதுகாப்போம்…
வறட்சியிலும் கதிர் தள்ளும்…
பேரழிவை எதிர்கொள்ளும்…

வறட்சி மற்றும் இயற்கைச் சீற்றங்களின்போதும் தாக்குப்பிடிக்கக் கூடிய பாரம்பரிய நெல் ரகங்கள் கண்ணுக்குத் தெரியாமல் அழிந்து வருகின்றன. பருவநிலை மாற்றத்தின் தாக்கத்தால் நெல் சாகுபடியில் ஏற்படும் பாதிப்புகளை எதிர்கொள்ளும் வகையில் இந்த பாரம்பரிய நெல் ரகங்களை காப்பதில் கவனம் செலுத்த வேண்டும் என்கிறார்கள் இயற்கை வேளாண்மை ஆர்வலர்கள்.
——

தமிழ்நாட்டில் காவிரியில் போதிய தண்ணீர் வரவில்லை. மழை பொய்த்துவிட்டது. அதனால், இந்த ஆண்டு தமிழ்நாட்டின் நெல் உற்பத்தி பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. 2011-12-ல் ஜூன் முதல் மார்ச் வரையிலான காலத்தில் 23.1 லட்சம் டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டது. ஆனால், இந்த ஆண்டில் அந்த அளவு 5.57 லட்சம் டன்னாகக் குறைந்து விட்டது. ஏற்கெனவே, பிற மாநிலங்களிலிருந்து அரிசி வரத்தை எதிர்பார்த்து வந்த தமிழகம், இந்த ஆண்டில் மேலும் கடும் நெருக்கடியைச் சந்திக்க உள்ளது. இதனால், அரிசி விலை மேலும் உயரலாம். பருவநிலை மாற்றத்தின் காரணமாக, எதிர்காலத்தில் பருவமழை பொய்த்துப் போய் வறட்சி ஏற்படுதல், காலம் தவறி மழை பெய்தல் போன்றவற்கான வாய்ப்புகள் இருப்பதையும், அடுத்த இருபது, முப்பது ஆண்டுகளில் நெல் விளையும் நிலங்களில் வேறு மாற்று பயிர்களை பயிரிட வேண்டிய சூழ்நிலைக்கு சூழ்நிலைக்கு ஆளாக வேண்டியதிருக்கும் என்றும் அதற்கேற்ற வகையில் நமது சாகுபடி முறையில் மாற்றங்கள் செய்ய வேண்டியதன் அவசியத்தையும் விஞ்ஞானிகள் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார்கள். பருவநிலை மாற்றத்தை எதிர்கொள்ளும் வகையில், கடும் வறட்சியைத் தாக்குப்பிடிக்கக் கூடிய பாரம்பரிய நெல் ரகங்கள் நம்மிடம் இருக்கின்றன. அவற்றில் பல, காலப்போக்கில் அழிந்து விட்டன. இருக்கின்ற ரகஙகளையாவது காப்பாற்றி, விவசாயிகளுக்குக் கொண்டு சேர்த்தாலேயே நல்ல பலன்கள் கிடைக்கும். மழை பெய்யவில்லை. அதனால் நெல் பயிர் கருகி விட்டது என்ற நிலைமைகளை சமாளித்து விடலாம் என்கிறார்கள் இயற்கை விவசாய ஆர்வலர்கள்.

களர்பாலை. இது நமது பாரம்பரிய நெல் ரகம். காரத்தன்மை வாய்ந்த களர் நிலத்திலும் வளரக் கூடியது. நாற்றாக்கி நட வேண்டியதில்லை. மழை பெய்கிறபோது விதைத்து விட்டால் போதும். இந்த நெல் பயிருக்குத் தண்ணீர் அதிகம் தேவைப்படாது. இதற்கு உரம் போட வேண்டியதில்லை, களை எடுப்பதற்காகவும் அதிகம் செலவிட வேண்டியதில்லை. பூச்சி மருந்து தேவையில்லை. பக்கத்து வயலில் வேறு ரக நெல்லில் பூச்சி வந்திருந்தாலும், இந்த நெல்லை எந்தப் பூச்சியும் தாக்குவதில்லை. 10 நாளைக்கு ஒரு முறை தண்ணீர் விட்டால் கூட போதும். வறட்சியிலும் இந்த நெல் விளைந்து விடும். காரத்தன்மை வாய்ந்த களர் நிலத்திலும் பயிராகக் கூடிய இந்த ரக நெல், தற்போது திருவண்ணாமலையை அடுத்துள்ள நாகப்பாடி கிராமப் பகுதியில் சில விவசாயிகள் பயிரிட்டு வருகிறார்கள்.

“இது 90 நாள் பயிர். ஆடி, ஆவணி, புரட்டாசியில் விதைக்கலாம். ஒரு ஏக்கருக்கு பத்து பதினைந்து மூட்டை நெல் கிடைக்கும். நாங்க எங்க உபயோகத்துக்கு வைச்சுக்கிட்டு, மீதத்தை வேறு யாருக்காகவது விற்று விடுகிறோம். எங்க நிலத்திலே குண்டு, சீரக சம்பா போன்ற நெல் ரகங்களைப் போடலாம். ஆனால், மழை இல்லாவிட்டால் ஒன்றும் கிடைக்காது. ஒன்றும் இல்லாமல் சிரமப்படுவதைவிட, ஏதாவது நிச்சயம் கிடைககும் என்பதால் களர்பாலையை பயிரிடுகிறோம்” எனகிறார் நாகப்பாடி கிராமத்தைச் சேர்ந்த ஆறுமுகம்.

. “எனக்கு 9 ஏக்கர் நிலம் இருக்கிறது. நானும் இந்த களர்பாலை நெல்லை பயிரிட்டு வருகிறேன். ஒரு மூட்டை நெல் இந்த வருஷம் ஆயிரம் ரூபாய்க்கு போகிறது. சீரக சம்பா விதைச்சால் ஒரு மூட்டை இரண்டாயிரத்துக்குப்போகும். களர்பாலை நெல்லை அறுவடை செய்ய வருகிறவரகள்கூட, கூலியாக வேறு நெல்லை கேட்கிறார்கள். அப்புறம் எதற்கு இதனைப் போட வேண்டும்? ஒரு ஏக்கருக்கும் குறைவான இடத்தில் இந்த நெலலை பயிர் செய்து வருகிறேன். மற்ற நிலத்தில் வேறு பயிர்கள் சாகுபடி செய்கிறேன்” என்கிறார் காரப்பட்டு கிராமததைச் சேர்ந்த பி. சுப்பிரமணி. இதேபோல சுமார் இருபது, இருபத்தைந்து விவசாயிகள் களர்பாலையை பயிரிட்டு வருகிறார்கள். ஆனாலும்கூட, வறட்சியைத் தாங்கும் இந்த நெல்லை பயிரிடும் விவசாயிகளின் எண்ணிக்கை இந்தப் பகுதியில் படிப்படியாகக் குறைந்து வருகிறது. வேறு எந்த நெல்லும் விளையாத இடங்களில் களர்பாலை மட்டுமே சாகுபடி நன்றாக வருகிறது என்பதால் இந்த நெல் இந்த அளவுக்காவது பயன்பாட்டில் இருக்கிறது என்கிறார்கள் இப்பகுதியைச் சேர்ந்தவர்கள்.

“திருவண்ணாமலை மாவட்டத்தில் வறட்சியிலும் தாக்குப்பிடிக்கக் கூடிய மொட்டக்கூர் நெல் 7 அடி உயரம் வளரக்கூடியது. இதற்கு உரம், பூச்சி மருந்து எதுவும் தேவையிலலை. விதைத்து விட்டால் போதும். 5 மாதத்தில் 15 மூட்டை நெல் எடுத்து விடலாம. இதேபோல, சிவகங்கை மாவட்டம் காளையார் கோவில் பகுதியில் வாடன் சம்பா நெல். வறட்சியில் அருகம்புல் காய்ந்து போனாலும் இந்த நெல் காய்ந்து போகாது. 5 மாத காலம் ஆகும் இந்தப் பயிருக்கும் தண்ணீரும் தேவையில்லை. உரமும் தேவையில்லை. புழுதி விதைப்புதான். இந்த குறிப்பிட்ட இரண்டு ரகங்களும் தற்போது இல்லை. இதுபோல வறட்சியிலும் தாக்குப்பிடிக்கக் கூடிய பாரம்பரிய நெல் ரகங்கள் அருகி வருகின்றன. இதேபோல, களர்பாலையும் சில ஆண்டுகளில் காணாமல போய் விடலாம்” என்கிறார் திருவண்ணாமலை மாவட்ட தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தலைவர் பி.டி. ராஜேந்திரன்.

“பாசுமதி அரிசி பாரம்பரிய ரகத்தைச் சேர்ந்தது. அதை எப்படி பிரபலப்படுத்தி விற்று லாபம் பார்க்கிறார்கள். அதேபோல தரம் வாய்ந்த நமது சீரகச் சம்பாவையும் பிரபலப்படுத்தினால் விவசாயிகளுக்கு நல்ல வருவாய் கிடைக்கும். சிறிய மாநிலமான நாகலாந்தில் 857 பாரம்பரிய நெல் ரகங்களைப் பாதுகாத்து வருகிறார்கள். ஒடிசா மாநிலத்தில் பாரம்பரிய நெல் ரகங்களை பயிரிட அங்குள்ள அரசு மானியம் வழங்குகிறது. பாரம்பரிய நெல் ரகங்களை பாதுகாப்பதற்காக தமிழக விவசாயிகளுக்கும் அரசு ஊக்கமளிக்க வேண்டும். மானாவரி நிலங்களில் பாரம்பரிய நெல் விளையக்கூடிய வாய்ப்பு உள்ளது. இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்” என்கிறார் அவர்.

“சுனாமியில் கடல்நீர் புகுந்து பாதிக்கப்பட்ட நிலங்களில் இந்த களர்பாலை நெல் பயிரிடத் தொடங்கியிருக்கிறார்கள். காரத்தன்மை கொணட நிலங்களில் நல்ல விளைச்சலைத் தரக்கூடியது களர்பாலை. எனவே, களர்நிலங்கள், காரத்தன்மை கொண்ட நிலங்களில் இந்த நெல்லைப் பயிரிடலாம். வேதாரண்யம் பகுதியில் சில கிராமங்களில் பயிரிட்டு நல்ல பலன் கிடைத்திருக்கிறது” என்கிறார் இந்திய பாரம்பரிய அறிவியல் மைய (சிஐகேஎஸ்) அமைப்பைச் சேர்ந்த சுபாஷிணி ஸ்ரீதர். களர் நிலங்களில் சாகுபடி செய்வதற்காக தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகம் அறிமுகப்படுத்திய திருச்சி-1, திருச்சி-2 ரக புதிய ரக நெல்கள் உரிய அளவில் பயன்தரவில்லை என்கிறார்கள் விவசாயிகள். இந்த நிலையில் உரமோ பூச்சி மருந்தோ தேவைப்படாத பாரம்பரிய நெல் ரகங்களைப் பயன்படுத்தலாமே? என்பதுதான் பலரது கேள்வி.

“வறட்சியைத் தாக்குபிடித்து விளையக்கூடிய சம்பாமோசனம், தற்போது இல்லை. சிவப்பு குருவிக்கார், சூரன் குறுவை போன்ற வறட்சியைத் தாக்குப் பிடிக்கக் கூடிய ரகங்கள் வேதாரண்யம் வட்டத்தில் பெரிய குத்தகை பகுதியில் பயிரிடப்படுகிறது. குழியடிச்சான் என்ற மற்றொரு ரகம், வேதாரண்யம் பகுதியிலும் ராமநாதபுரம் பகுதியிலும் தற்போது பயிரிடப்படுகிறது. இதேபோல, குடைவாழை என்ற நெல் ரகம் வறட்சியிலும் நன்கு விளைந்து விடும். உரம் வேண்டாம்., பூச்சிக் கொல்லி மருந்துகள் தேவைப்படாது. இருந்தாலும், பாரம்பரிய நெல் ரகங்களில் மகசூல் குறைவு. அத்துடன் விற்பனையிலும் பிரச்சினைகள் இருக்கின்றன. அரசின் கொள்முதல் பட்டியலில் அறிவிக்கப்பட்டுள்ள நெல் ரகங்களை மட்டுமே அரசு கொள்முதல் செய்யும். அந்தப் பட்டியலில் பாரம்பரிய நெல் ரகங்கள் இல்லாததால், அரசு கொள்முதலுக்கு இந்த நெல் ரகங்களைக் கொடுக்க முடியாத நிலை உள்ளது“ என்பதைச் சுட்டிக்காட்டுகிறார் சுபாஷிணி.

“கருடன் சம்பா, மாப்பிள்ளை சம்பா ஆகிய நெற் பயிர்களுக்கு அதிகமாகத் தண்ணீர் தேவைப்படாது. வறட்சியிலும் மகசூல் கொடுக்கக் கூடியது. ரசாயன உரமோ பூச்சி மருந்தும் தேவையில்லை. 150, 160 நாளில் அறுவடை செய்யலாம். ஒரு ஏக்கருக்கு 60 கிலோ மூட்டை 24 கிடைத்து விடும். காட்டுயாணம் என்ற ஒரு வகை நெல் 180 நாளில் வளரும். ஐந்து, ஆறடி உயரம் வரை வளரும். நேரடியாக விதைத்து விடலாம. தண்ணீர் அவ்வளவு தேவைப்படாது. வேதாரண்யம் அருகே தலைஞாயிறு ஒன்றியத்தில் விவசாயிகள் இந்த நெல்லைப் பயிரிடுகிறார்கள்.புளிவெடிச்சான், பனங்காட்டுக் குடவாலை, பூம்பாளை போன்ற பாரம்பரிய ரகங்களும் இருக்கின்றன. இலுப்பைப் பூ சம்பா, விதைத்தால் போதும். 130 நாளில் அறுத்து விடலாம். உவர் நிலத்தில் வளரக் கூடியது கைவரகு சம்பா. வறட்சியான சிவகங்கை மாவட்டத்தில் கவுனி நெல்லும் ராமநாதபுரத்தில் வரப்புக் குடைஞ்சான் நெல்லும் பயிரிடப்படுகிறது. நாகர்கோவில் பகுதியில் அறுபதாம் குறுவை என்ற நெல் 60 நாளில் விளைந்து விடும். இதைப் பயிரிடுவதற்கு என்று சீசன் கிடையாது. எந்தக் காலத்திலும் பயிரிடலாம். சாதாரண அளவு தண்ணீர் இருந்தால் போதும். இதனால், பல்வேறு இடங்களில் உள்ள விவசாயிகள் இந்த குறுகிய கால நெற் பயிரை பயிரிட தற்போது ஆர்வம் காட்டி வருகிறார்கள்” .என்கிறார் திருவாரூர் மாவட்டம் திருத்துறைப் பூண்டியில் விவசாயிகளுக்கு பாரம்பரிய விதைகளை வழங்கும் கிரியேட் என்ற அமைப்பை நடத்தி வரும் விவசாயி ஜெயராமன்.

“வறட்சிக்கு மட்டுமலல மழை, வெள்ளத்துக்கும் தாக்குப்பிடிக்கக்கூடிய பாரம்பரிய நெல் ரகங்கள் இருக்கின்றன” என்று கூறும் ஜெயராமன், “குளம், குட்டைகள் போல தண்ணீர் நிற்கும் இடங்களில் பயிர் செய்வதற்கு ஏற்ற நெல் கார். அந்த நெல்லை நட்டு அது வேர் பிடித்து விட்டால் போதும். அப்புறம் எவ்வளவு தண்ணீர் வந்தாலும் அதற்காக, பயிர் சாய்ந்து விடாது. தண்ணீரில் இருக்கும்போதே இந்த நெல்லை அறுவடை செய்து விடலாம். ஈரமாக இருந்தாலும் வீட்டில் வைத்திருக்கும் போது உடனே முளைவிட்டு விடாது. இதேபோல தண்ணீரில் இருந்தாலும் சாயாத பயிர் நலுமுடுங்கி நெல் ரகம்” என்று விளக்குகிறார்.

“இந்த நெல் நகரங்களை பயிரிட விரும்பும் விவசாயிகளுக்கு விதைகள் வழங்கி வருகிறோம். இரண்டு கிலோ விதை நெல் கொடுத்தால் அவர்கள் அதை பயிர் செய்து, நான்கு கிலோ இந்த பாரம்பரிய நெல்லை பயிர் செய்யும் விவசாயிகள் நேரடியாக அங்காடிகளில் விற்பதற்கும் உதவி வருகிறோம். நெல்லை மதிப்புக் கூட்டி பொருள்களாக்கி விற்றால் விவசாயிகளுக்கு மேலும் நல்ல லாபம் கிடைக்கும்” என்கிறார் ஜெயராமன். “இயற்கை விவசாய முறையில் உற்பத்தி செய்யப்படும் நெல் ரகங்களை விற்றுத்தர புளியங்குடி விவசாயிகள் சேவா நிலையம் உதவி வருகிறது. அரிசியாக்கித் தர வேண்டும். அப்போதுதான் நல்ல விலை கிடைக்கும்” என்கிறார் திருநெல்வேலியில் உள்ள இயற்கை விவசாய ஆர்வலர் வைகை குமாரசாமி.

வறட்சியை எதிர்கொள்ளவும் இயற்கைச் சீற்றங்களைத் தாங்கி வளரக் கூடியதாகவும் இருக்கக் கூடிய பாரம்பரிய நெல் ரகங்களை அழியாமல் காக்க வேண்டுமானால், அந்த விதைகளைப் பாதுகாப்பதற்கான நடவடிக்கைகள் தேவை..அதனை பயிரிடும் விவசாயிகள் அந்த விளைபொருள்களை விற்பதற்கான வழிமுறைகளும் தேவை. ஏற்கெனவே பாரம்பரியமாக இருந்த பல நெல் வகைகள் காணாமல் போய்விட்டன. இந்தச் சூழ்நிலையில், பாரம்பரிய நெல்லை பாரம்பரிய நெல்லை பரவலாக்கி அதனைப் பாதுகாக்க அரசு திட்டமிட்டு செயல்படாவிட்டால் மற்ற பாரம்பரிய ரக நெல் வகைகளையும் காலப் போக்கில் இழந்து விடுவோம். வரும்முன் காக்க வேண்டியதில் அரசுக்கும் பங்கு இருக்கிறது.

Puthiyathalaimurai (09-05-2013)

Predicted sea level rise and impact along Tamil Nadu coast

Summary: The centre for Climate Change and Adaptation Research, Anna University, studied the impact of sea level rise in Tamil Nadu and suggested the Adaptation strategies. Some researchers from IFMR and IIT concentrate on the impacts of sea level rise on coastal infrastructure, ecosystem and land in the state of Tamil Nadu which has a long coastline. It highlights the financial implications of sea level rise on existing and proposed infrastructure along the Tamil Nadu coast and provides thereby an “early warning” of the implications of indiscriminate development close to the shoreline. Using Tamil Nadu as a case study, the analysis in this report provides preliminary estimates of the replacement value of major infrastructure, the present value of ecosystem services associated with damage to wetlands and the market value of land at risk from 1m of sea level rise by 2050.

கடல் நீர்மட்டம் உயர்ந்தால் தமிழகம் என்ன ஆகும்?

பருவநிலை மாற்றம் காரணமாக, தமிழகத்தில் கடல் நீர் மட்டம் ஒரு மீட்டர் உயர்ந்தால் ரூ.3 லட்சம் கோடியிலிருந்து ரூ.61 லட்சம் கோடி வரை சீரமைப்புப் பணிகளுக்காகச் செலவிட வேண்டியது வரும் என்கிறது ஆய்வுகள்.

———

இந்த நூற்றாண்டில் மனித குலம் எதிர்கொள்ள வேண்டிய முக்கிய சவாலாக இருப்பது பருவநிலை மாறுதல். உலகம் வெப்பமயமாகி வருவதால், கடல் நீர் மட்டம் உயர்ந்து வருகிறது. கடல் நீர் மட்டம் உயர்ந்து வருவதால் உலகில் நில அரிப்பு உள்பட பாதிப்புகள் ஏற்படுகின்றன. கடலோரப் பகுதிகளில் உள்ள வேளாண் நிலங்கள் பாதிக்கப்படும். நிலத்தடி நீரும் பாதிக்கப்படும். உலக அளவில் கடல் நீர் மட்டம் ஆண்டுக்கு ஒரு மில்லி மீட்டரிலிருந்து 2 மில்லி மீட்டர் வரை உயர்ந்து வருகிறது என்று பருவநிலை மாற்றுத்துக்கான பன்னாட்டு அரசுக் குழுவின் மூன்றாவது மதிப்பீட்டு அறிக்கை தெரிவித்துள்ளது. இந்த நூற்றாண்டின் முடிவில் நமது பூமியின் சராசரி வெப்பநிலை 1990-ம் ஆண்டில் இருந்ததைவிட 1.4 டிகிரி செல்சியஸ் முதல் 5.8 டிகிரி செல்சியல் வரை அதிகரிக்கலாம். அதேபோல கடல் நீர்மட்டம் 2100ம் ஆண்டில் 0.1 முதல் 0.9 மீட்டர் வரை உயரும் என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. இந்தியக் கடலோரப் பகுதிகளில் 2050-ம் ஆண்டில் 15 முதல் 38 செமீ வரை கடல் நீர் மட்டம் உயரும் என்றும் 2100ம் ஆண்டு வாக்கில் 46 முதல் 59 செமீ வரை கடல் நீர் மட்டம் உயரும் என்று பருவநிலை மாற்றத்துக்கான நமது தேசிய செயல் திட்ட அறிக்கையில் (2008) குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த நிலையில், பருவநிலை மாற்றத்தின் காரணமாக தமிழகக் கடலோரப் பகுதிகளில் கடல் நீர் மட்டம் உயர்வதால் எந்த அளவுக்கு நிதி பாதிப்பு ஏற்படும் என்பதை சென்னையில் உள்ள இன்ஸ்டிட்யூட் ஆஃப் பைனான்சியல் மேனேஜ்மெண்ட் ஆய்வாளர்கள் சுஜாதா பைரவன், ராஜேஷ் ரெங்கராஜன், சென்னை ஐஐடியை சேர்ந்த ஆய்வாளர் சுதிர் செல்லராஜன் ஆகியோர், கணக்கிட்டுள்ளனர். துறைமுகங்கள், மின்நிலையங்கள், கிழக்குக் கடற்கரைச்சாலை, சதுப்பு நிலங்கள் உள்ளிட்ட நிலங்கள் ஆகியவற்றுக்கு ஏற்படும் பாதிப்புகளை சீரமைக்க எவ்வளவு நிதி தேவைப்படும் என்பது குறித்து ஆராய்ந்துள்ளனர். கடலோரப் பகுதிகளில் வாழும் மக்கள் இடம் பெயர்வதால் ஏற்படும் பாதிப்புகள் குறித்தும் கடலோரப் பகுதிகளில் தனியார் மற்றும் பொதுத் துறை முதலீடுகள் போன்றவை குறித்தும் இந்த ஆய்வில் கணக்கில் கொள்ளப்படவில்லை.

“2050ம் ஆண்டில் கடல் நீர் மட்டம் ஒரு மீட்டர் அளவுக்கு உயர்ந்தால், தமிழ்நாட்டில் நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை, ராமநாதபுரம் மாவட்டங்கள் அதிகமாக பாதிக்கப்படும். கடலோரத்தில் உள்ள மற்ற எட்டு மாவட்டங்களிலும் இந்த பாதிப்பு இருக்கும். இந்தக் கடலோரப் பகுதிகளில் உள்ள 1091 சதுர கிலோ மீட்டர் நிலங்களில் கடல் நீர் புகுந்துவிடும் அபாயம் இருக்கிறது. கடல் நீர் மட்டம் உயர்வினால் தமிழகக் கடலோரப் பகுதிகளில் உள்ள துறைமுகங்கள், மின்நிலையங்கள், முக்கிய சாலைகள் போன்றவற்றை சீரமைக்க ரூ.47,418 கோடியிலிருந்து ரூ53,554 கோடி வரை செலவாகும். இது, 2010ம் ஆண்டு மதிப்பீட்டின் அடிப்படையில் உள்ள கணக்கு இது. கடலோரப் பகுதிகளில் உள்ள சதுப்பு நிலங்கள் பாதிக்கப்படுவதால் அதுதொடர்பான சேவை இழப்பு ரூ.3,583 கோடியிலிருந்து ரூ.14,608 கோடி வரை இருக்கலாம் என்று கணக்கிடப்பட்டுள்ளது. நிலப் பகுதிகளில் கடல் நீர் புகுவதால் ஏற்படும் இழப்புதான் மிக அதிகமாக இருக்கும். அதாவது, ரூ. 3,17,661 கோடியிலிருந்து 61,15,471 கோடி வரை நிலங்களில் ஏற்படும் பாதிப்பு இருக்கும்” என்று இந்த ஆய்வு மூலம் தெரிய வந்துள்ளது.

“தமிழ்நாட்டில் கடல் நீர் மட்டம் உயரும் போது, நிலங்கள் மற்றும் சுற்றுச்சூழலுக்கு ஏற்படும் பாதிப்பு, உள்கட்டமைப்புகளுக்கு ஏற்படும் பாதிப்பு குறித்து விரிவான மதிப்பீட்டு ஆய்வு செய்யப்பட வேண்டும். கடலோரப் பகுதிகளில் உள்கட்டமைப்பு மேம்பாட்டுத் திட்டங்களைச் செயல்படுத்தும் போது பருவநிலை மாற்றத்தினால் கடல் நீர் மட்டம் உயர்வது குறித்தும் கணக்கில் கொண்டு செயல்பட வேண்டும். கடலோரப் பகுதிகளில் சதுப்பு நிலங்களைப் பாதுகாக்க சிறப்பு நடவடிக்கைகள் தேவை. கடலோரப் பகுதிகளின் பாதுகாப்புக்கான நடவடிக்கைகளிலும் சிறப்பு கவனம் செலுத்த வேண்டும்” என்பது போன்ற பரிந்துரைகளை இந்த ஆய்வாளர்கள் அரசுக்குப் பரிந்துரை செய்துள்ளனர்.

.கடல் நீர் மட்டம் அதிகரித்தால் பழவேற்காட்டிலிருந்து கன்னியாகுமரி வரை 1076 கிலோ மீட்டர் தூரம் கொண்ட தமிழக கடலோரப் பகுதிகளில் என்ன பாதிப்புகள் ஏற்படும் என்பது குறித்து அண்ணா பல்கலைக்கழகத்தின் பருவநிலை மாற்றம் மற்றும் தக அமைவு ஆராய்ச்சி மையம் தமிழக அரசின் சுற்றுச்சூழல் துறைக்கு ஆய்வு அறிக்கையை சமர்ப்பித்துள்ளது. அதில் குறிப்பிடப்பட்டுள்ள விவரங்கள், கடல்நீர் மட்ட அதிகரிப்பை எதிர்கொள்ள நாம் எத்தகைய முன் எச்சரிக்கையுடன் இப்போதிருந்தே செயல்செயல்பட வேண்டும் என்பதை வெளிப்படுத்துகின்றன.

“தமிழகத்தில் 1969ம் ஆண்டு முதல் 2009-ம் ஆண்டு அதிகபட்ச வெப்ப நிலை 0.6 டிகிரி செல்சியஸ் அளவுக்கு அதிகரித்துள்ளது. குறைந்தபட்ச வெப்பநிலை 0.39 டிகிரி செல்சியஸ். அளவுக்கும் ச்ராசரி வெப்பநிலை 0.45 டிகிரி அளவுக்கும் அதிகரித்துள்ளது. இவை பருவநிலை மாற்றத்தின் தாக்கத்தை உணர்த்துபவை. இந்த நிலையில், தமிழகத்தின் கடலோரப் பகுதிகளில் 0.5 மீட்டர் அளவுக்கு கடல் நீர் மட்டம் உயர்ந்தால் தமிழகத்தின் கடலோரப் பகுதிகளில் உள்ள மாவட்டங்களில் கடல் நீரால் 66,685 ஹெக்டேர் அளவுக்கு நிலம் பாதிக்கப்படும். ஒரு மீட்டர் அளவுக்கு கடல் நீர் மட்டம் உயர்ந்தால் 1,05,642 ஹெக்டேர் அளவு நிலங்கள் கடல்நீரால் பாதிக்கப்படும். கடல் நீர் மட்ட உயர்வினால் தமிழகத்தின் கடலோரத்தில் உள்ள 13 மாவட்டங்களில் நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர் ஆகிய மாவட்டங்கள் அதிகம் பாதிக்கப்படும். கடல் நீர் உட்புகுவதால் கடலோரப் பகுதிகளில் உள்ள விவசாய நிலங்கள் பாதிப்புக்கு ஆளாக நேரிடும். அத்துடன், தூத்துக்குடி, சென்னை மாவட்டங்களுக்கு அடுத்தபடியாக ராமநாதபுரம், புதுக்கோட்டை மாவட்டங்களில் நிலத்தடி நீர் பாதிப்புக்கு ஆளாகும். சில இடங்களில் கடல் நீர் புகுவதால் நிலத்தடி நீர் உப்புத்தன்மை கொண்டதாக மாறலாம். பருவநிலை மாற்றத்தின் தாக்கங்களை அலையாத்திக் காடுகளிலும் பவளப் பாறைகளிலும் கடல் வள உற்பத்தியிலும் காண முடியும்” என்று அந்த ஆய்வில் தெரிய வந்துள்ளதாகக் கூறும் அண்ணா பல்கலைக்கழகத்தின் பருவநிலை மாற்றம் மற்றும் தக அமைவு ஆராய்ச்சி மைய இயக்குநர் ஏ. ராமச்சந்திரன், பருவநிலை மாற்றத்தின் தாக்கங்களை எதிர்கொள்ளும் வகையில் எத்தகைய யுக்திகளைக் கடைபிடிக்க வேண்டும். தற்போதுள்ள திட்டங்களில் எத்தகைய மாறுதல்கள் செய்ய வேண்டும் என்பது குறித்தும் அந்த அறிக்கையில் பரிந்துரைகள் அளிக்கப்பட்டுள்ளது என்கிறார்..

மக்கள் தொகை அடர்த்தி, நகர்மயமாதல், தொழில் வளர்ச்சி, கடலோர சுற்றுப்புறச்சூழலில் ஏற்படும் பாதிப்புகள், புயல் போன்ற இயற்கைப் பேரழிவுகள் காரணங்களால் கடலோரப் பகுதி மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டு வருகிறது. கடல் நீர் மட்டம் உயர்ந்தாலும் கடலோரப் பகுதிகளில் உள்ள மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படும்.கடல் நீர் மட்டம் ஒரே ஆண்டில் அரை மீட்டரோ அல்லது ஒரு மீட்டரோ உயர்ந்து விடப் போவதில்லை. ஆனால், ஒரு சில மில்லி மீட்டர் உயர்வது கூட, எதிர்காலத்தில் சிறு துளி பெருவெள்ளமாகிவிடலாம். எனவே, கடல் நீர் மட்டம் உயர்வதால் ஏற்படும் பாதிப்புகளை எதிர்கொள்வதற்கு உரிய நடவடிக்கைகளை தேவை. நமக்காக இல்லாவிட்டாலும் எதிர்கால சந்ததியினருக்காவது இதில் இப்போதே கவனம் செலுத்த வேண்டும் என்பது ஆய்வாளர்களின் கருத்து.

Puthiyathalaimurai (02-05-2013)

Threats to Mangrove eco system in Pichavaram

Summary: The mangroves are the coastal bio shields to protect the coastline from natural calamities. During tsunami, Tamil Nadu witnessed several years ago, few villages in Pichavaram area were escaped from the disaster, thanks to Mangrove eco system. But, there is a continuous threat to the mangrove wetlands in Pichavaram area and some measures are going on to restore the mangroves.

ஆழிப் பேரலைக்கு அஞ்சாத அலையாத்திக் காடுகள்!

“தம்பி, கடல் நீரின் மீது ஒரு காடு. அடர்ந்து இருந்தது முன்பு என்பது, இப்போது அழிபட்டுக் கிடக்கும் நிலையிலும் தெரிகிறது. வேறெங்கும் அதிகம் காணப்படாததும், உப்பங்கழிகளில் மட்டுமே வளரக்கூடியதுமான, பலவகை மரங்கள்,கொடிகள், செடிகள் நிரம்பி உள்ளன. ஆலுக்குள்ள விழுதுகள் போல, அந்தச் செடிகளில் இருந்து கிளம்பிய கொடிகள், தண்ணீரைத் தொடுகின்றன; உள்ளேயும் செல்கின்றன. இடையிடையே திட்டுகள் உள்ளன. அவை மேய்ச்சல் இடங்களாகப் பயன்படுகின்றன. சில இடங்களில் விரிந்து பரந்து உள்ளன. சில இடங்களிலோ, தோணி நுழைகின்ற அளவு மட்டுமே நீர்ப்பரப்பு உள்ளது. அங்கே, விழுதுகளும், கொடிகளும் வழிமறித்து நிற்கின்றன. வளைத்தும், பிரித்தும், நீக்கியும் வழி காண வேண்டி இருக்கிறது. செம்போத்தும், குருகும், வக்காவும், வண்ணப்பறவைகளும், ஆங்காங்கு தங்கி உள்ளன. இசை எழுப்பும் பறவைகளும் உள்ளன. ஆள் அரவம் கேட்டு மரத்தில் இருந்து கிளம்பிச் சிறகடித்துக் கொண்டு, வேறிடம் நாடிப் புள்ளினம் பறந்திடும் காட்சி, உள்ளபடியே அழகாக இருக்கின்றது. வெளிர் நீலவண்ண நீர், சூழப் பச்சை, மேலே நீலமும், வெண்மையும் கொண்ட மேகக்கூட்டம், இடையில் வெண்ணிறக் கொக்குகள், விமானப்படை அணிவகுத்துச் செல்வதைப் போல!…” இப்படி எழுதினார் திராவிட நாடு இதழில் (3.7.1960) அண்ணா. ஐம்பது ஆண்டுகளுக்கு முன்பிருந்த நிலைமை தற்போது இல்லை. பல்வேறு வளர்ச்சித் திட்டங்கள், சுற்றுச்சூழல் பாதிப்பு, பருவநிலை மாற்றம் போன்ற காரணங்களால் அலையாத்திக் காடுகள் பாதிப்புக்கு ஆளாகி வருகின்றன.

“ஆழிப்பேரலை (சுனாமி) ஏற்படும் காலங்களில் அலையாத்திக் காடுகள் தடுப்பு அரண் போல திகழ்கின்றன. தமிழகத்தில் சுனாமி தாக்கிய போது பிசசாவரம் பகுதியில் அலையாத்திக் காடுகள் இல்லாத மூழ்குதுறையில் 82 சதவீத வீடுகள் அழிந்து விட்டன. 20 பேர் இறந்து போனார்கள.ஆனால், அலையாத்திக் காடுகள் இருந்த டி.எஸ். பேட்டை என்ற ஊரில் ஒரு வீடு கூட பாதிப்புக்கு ஆளாகவில்லை. அந்த ஊரில் சுனாமியில் இறந்து போனவர்கள் யாரும் இல்லை” என்று அலையாத்திக் காடுகளின் முக்கியத்துவத்தை விளக்கிறார் எம்.எஸ்.சுவாமிநாதன் ஆராய்ச்சி ஃபவுண்டேஷனின் கடலோர ஆராய்ச்சி அமைப்பின் இயக்குநர் வி.செல்வம்.

“கடலோரப் பகுதிகளில் உள்ள சதுப்பு நிலங்களில் உவர்நீரில் வளரும் மரங்களும் காடுகளும் மாங்க்ரூவ் எனப்படும் அலையாத்திக் காடுகள். இந்தக் காடுகள், அலைகளைத் தடுத்து திரும்பி அனுப்புவதால் இதற்கு அலையாத்திக் காடுகள் என்று பெயர். கடலோரப் பகுதிகளில் உள்ள சதுப்பு நிலங்களில் உள்ள அலையாத்திக் காடுகள் இயற்கை அரண் போல இருக்கின்றன.இந்த கடல் நீர் மட்டம் உயருவதால் ஏற்படும் பாதிப்புகளைத் தடுப்பதில் அலையாத்திக் காடுகளுக்கு முக்கியப் பங்கு இருக்கிறது. கடல் நீர் மட்டம் உயர உயர, அலையாத்திக் காடுகள் உள்ள சதுப்பு நில உயரமும் அதற்கேற்ப அதிகரிக்கும். இதனால் கடல் நீர் மட்டம் உயர்ந்தாலும் அதன பாதிப்புகள் அவ்வளவாக இருக்காது. ஆற்றிலிருந்து கடலுக்கு வரும வண்டல் மண் சதுப்பு நிலத்திற்கு வந்து விடும். அலையாத்திக் காடுகளிலிருந்து உதிரிந்து விழும் இலைகள் மக்கி உயரம் உயர்ந்து வரும். அதாவது கடல் நீர் மட்டத்துக்கு ஏற்ப அலையாத்திக் காடுகள் இருக்கும். ஆண்டுக்கு இரண்டு மில்லி மீட்டரிலிருந்து 5 மில்லி மீட்டர் வரை கடல் நீர் மட்டம் உயரும் என்று கணக்கிடப்பட்டுள்ளது. அதே அளவுக்கு இந்த சதுப்பு நிலங்களில் ஒரு மில்லி மீட்டரிலிருந்து ஐந்து மில்லி மீட்டர் வரை நிலமும் உயரும். எனவேதான் கடல் நீர் மட்டம் உயருவதால் ஏற்படும் பாதிப்புகளைத் தடுப்பதில் அலையாத்திக் காடுகளுக்கு முக்கியப் பங்கு இருக்கிறது” என்கிறார் அவர்

“இந்த அலையாத்திக் காடுகளில் உள்ள தாவரங்களுக்கு தனித்துவமான அம்சங்கள் இருக்கின்றன. வேர்கள் மூலம் உப்பு நீரிலிருந்து நல்ல தண்ணீரை எதிர் சவ்வூடு பரவல் மூலம் ஈர்க்கும் ஆற்றல் கொண்டவை. சில தாவரங்கள் உப்பு நீரை ஈர்த்து எடுத்துக் கொண்டாலும்கூட, தேவையான உப்பை மட்டும் எடுத்துக் கொண்டு மீதமுள்ளதை வெளியேற்றி விடுகிறது.உப்புத் தண்ணீரில் வளும் தாவரங்களின் ஜெனிட்டிக் ரிசோர்சஸ் முக்கியத்துவம் வாய்ந்தவை. அலையாத்திக் காடுகள் இறால் மீன்கள், நண்டுகள் வாழ்வுக்கு முக்கிய ஆதாரமாக திகழ்கின்றன. இறாலும் நண்டுகளும் ஆழ்கடலில் இனப்பெருக்கம் செய்தால்கூட, அதன்குஞ்சுகள் இடம் பெயர்ந்து அலையாத்திக் காடுகளில் அடைக்கலமாகின்றன. அங்குள்ள இலைகள் அவற்றுக்கு உணவாகவும் இருக்கின்றன. அலையாத்திக் காடுகள் சூழ்நிலை இல்லாவிட்டால் அந்தக் குஞ்சுகள் சரிவர வளருவதில்லை. அலையாத்திக் காடுகளை உருவாக்கினாலோ அல்லது மறுமீட்பு செய்தாலோ ஓராண்டுக்கு 13 ஆயிரம் டாலர்கள் அளவுக்கு மீன்களும் இறால்களும் கிடைக்கும் என்பது அறிவியல் ஆய்வு மூலம் தெரியவந்துள்ளது. எனவே, அழிந்து போன இடஙகளில் அலையாத்திக் காடுகளை மீண்டும் உருவாக்குதல், புதிய இடங்களில் அலையாத்திக் காடுகளை புதிதாக ஏற்படுத்துவதற்கான முயற்சிகளை மேற்கொள்ளுதல். அதாவது கடலோரங்களில் உள்ள மீன் பண்ணைகள், இறால் குட்டைகள் உள்ள பகுதிகளில் அலையாத்திக் காடுகளை ஏற்படுத்த வேண்டும். அண்மைக் காலங்களில் அலையாத்திக் காடுகளின் பரப்பளவு சற்று அதிகரித்துள்ளதால் நாம் மகிழ்ச்சி கொள்ள முடியாது. கடலோரப் பகுதிகளில் மேற்கொள்ளப்படும் பல்வேறு திட்டங்களால் அவை பாதிப்புக்கு ஆளாகலாம். எனவே, இருக்கின்ற அலையாத்திக் காடுகளை தொடர்ந்து பாதுகாத்து வர நடவடிக்கைக்கள் அவசியம். இதில் மக்களையும் ஈடுபடுத்த வேண்டும்” என்கிறார் செல்வம்.

Puthiyathalaimurai (2-05-2013)

Climate change impact on coral reefs in Gulf of Mannar

Summary: Coral reefs are rain forests of the sea and source of livelihood for million of people. During Tsunami, coral colonies safeguarded the coastal areas in Gulf of Mannar (from Rameswaram to Tuticorin). Coral reefs are a very sensitive to even slight increase of temperature. Due to elevated water temperature, the corals got bleached. the prolongation of temperature rise would lead to mortality of corals that would be a loss loss in terms of ecological, biological and economical point of view. Gulf of Mannar witnessed coral bleaching in 1998 and 2002. Since 2005, bleaching become an annual phenomenon especially in summer months and impacts varied in different levels. It is well known that climate change will affect reefs negatively through both increased temperatures and acidification Two small islands in this region submerged. The Sea level rise is also have an impact on coral colonies, according to the researchers. The cultivation of the seaweed, Kappaphycus alvarezii, is also affects the coral colonies in this region.

கடலுக்குள் மழைக் காடுகள்

சுனாமி வந்த போது ராமேஸ்வரத்திலிருந்து தூத்துக்குடி வரை உள்ள பகுதிகளில் எந்த பாதிப்பும் இல்லை. அதற்குக் காரணம் அந்தப் பகுதியில் 21 தீவுகளும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளிலும் உள்ள பவளப் பாறைகள். அலைகளின் வேகத்தைக் கட்டுப்படுத்துவதிலும் மீன் குஞ்சுகள் பொறிப்பதற்கான வாழ்விடமாக இருக்கும் பவளப் பாறைகள், பருவநிலை மாற்றம் காரணமாக கடல் வெப்பமயமாதல் உள்ளிட்ட காரணங்களால் படிப்படியாக அழிந்து வருகின்றன. இதனால், இப்பகுதி மீனவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.

——
ஒரு நாட்டின் கடல் வளம் பவளப் பாறைகளைக் கொண்டு கணக்கிடப்படுகிறது. உலகம் முழுவதும் பவளப் பாறைகள் அழிவின் விளிம்பில் உள்ளதை சமீபத்திய ஆய்வுகள் சுட்டிக்காட்டுகின்றன. அதற்கு மன்னார் வளைகுடாவும் விலக்கு இல்லை. “பருவநிலை மாற்றம் மற்றும் முறையற்ற மீன்பிடி தொழில் முறைகள் காரணமாக 2030-ம் ஆண்டில் உலகில் உள்ள பவளப் பாறைகளில் பாதி அளவு பவளப் பாறைகள் பிளீச்சிங் எனப்படும் வெளுப்பாகி பாதிப்புக்கு ஆளாகும்” என்று வோல்டு ரிசோர்சஸ் இன்ஸ்டிட்யூட் எச்சரித்துள்ளது.

பவளப் பாறைகள் (coral reefs) என்றதும் ஏதோ ஒரு வகை பாறையோ அல்லது தாவரமோ என்று கருதிவிட வேண்டாம். குழிமெல்லுடலிகள் (Coral polyps) என்ற வகையைச் சேர்ந்த இந்த உயிரினங்கள், கடலில் ஆழமில்லாத பகுதிகளில் அதிகம் காணப்படும். இதன் இளம் பருவத்தில பிளானுலா எனப்படும் கட்டியான பாறை போன்ற இடங்களில் ஒட்டி வாழ்ந்து வளர்ந்து பாலிப் என்ற பருவத்தை அடைந்த பிறகு, கால்சியம் கார்பனேட்டால் ஆன ஒரு குடுவை போன்ற கூட்டிற்குள் பாலிப் இருக்கும். வாய் வழியாக உண்டு வாய் வழியாக கழிவை வெளியேற்றும் தன்மை கொண்ட, பாலிப், கடலில் உள்ள நுண்ணுயிர்களை உண்டு வாழ்கின்றன. பாலிப்ஸ் உயிரிழந்து விட்டால் பவளப் பாறைகளும் உயிரிழந்து பவளப் பாறைத் திட்டுக்களாக மாறி விடுகின்றன. ராமேஸ்வரத்திலிருந்து தூத்துக்குடி வரை உள்ள பகுதியை உள்ளடக்கிய மன்னார் வளைகுடா கடல் பகுதிகளில் 3 ஆயிரத்துக்கு மேற்பட்ட அரியவகை கடல்வாழ் உயிரினங்கள் உள்ளன. எனவே, இந்த உயிரினங்கள் வாழும் பகுதியை மாநில அரசு 1986-ல் கடல்வாழ் உயிரின தேசியப் பூங்காவாக அறிவித்து, 1989-ல் இதனை உயிர் கோள பகுதியாக (Biosphere Reserve) மத்திய அரசு அறிவித்துள்ளது. அதனை யுனெஸ்கோவும் அங்கீரித்துள்ளது.

“பவளப்பாறைகள் கடலில் உள்ள மழைக்காடுகள் போன்றவை. வெப்பநிலையில் ஏற்படும் சிறிய மாற்றங்கள் கூட பவளப்பாறைகளை எளிதாகப் பாதித்து விடும். கடலின் நீரின் வெப்பநிலை அதிகரித்தால் பவளப்பாறைகள் வெளுப்பாகிவிடும். வெப்பநிலை உயர்வு காரணமாக கடல் பாசிகளின் வளர்ச்சி குறையும். அல்லது அந்த கடல் பாசிகள் அழிந்து விடும். இதனால், வெப்பநிலை அதிகரிப்பு நீடித்தால் பவளப்பாறைகள் இறந்து விடும். சூழல், உயிரியல், பொருளாதார நலன்களுக்கு இது பெரிய இழப்புதான்” என்கிறார் தூத்துக்குடியில் உள்ள சுகந்தி தேவதாசன் மெரைன் ரிசர்ச் இன்ஸ்டிட்யூட் இயக்குநர் ஜே. பேட்டர்சன் எட்வர்டு. இந்தப் பகுதியில் உள்ள பவளப் பாறைகள் குறித்து தொடர்ந்து இந்த அமைப்பு சார்பில் ஆய்வை மேற்கொண்டு வருகிறார் அவர்.

மன்னார் வளைகுடா பகுதியில் கடந்த நூற்றாண்டில் வெப்பநிலையில் 0.1 முதல் 0.90 டிகிரி செல்சியஸ் வரை மாற்றம் ஏற்பட்டுள்ளது. 1971-ம் ஆண்டிலிருந்து 2010-ம் ஆண்டு வரை 0.56 முதல் 2.26 செல்சியஸ் வரை மாற்றம் உள்ளது. உலக அளவில் ஏற்பட்டுளள வெப்பநிலை அளவை வைத்துப் பார்த்தால், மன்னார் வளைகுடா பகுதியில் வெப்பநிலை வேகமாக அதிகரித்து வருவதை ராமேஸ்வரம் பாம்பனில் நாஸா எடுத்து காட்டியுள்ள புள்ளி விவரங்களிலிருந்து தெரிந்து கொள்ள முடியும்.

வளி மண்டலத்தில் கார்பன் டை ஆக்ஸ்டைன் அளவு அதிகப்பதால், அந்த வாயு கடல் நீரில் கரையும். அளவும் அதிகரிக்கிறது. இதனால் கடல் நீர் மேலும்
அமிலத்தன்மை கொண்டதாகிறது. இதனால் பவளப் பாறைகள் பாதிக்கப்படுகின்றன. கடலின் வெப்பநிலை அதிகரிப்பும் முக்கியக் காரணமாக இருக்கிறது. அதாவது, வெப்பநிலை அதிகரிப்பு காரணமாக பவளப் பாறைகளை ஒட்டி அதற்கு உணவாக இருக்கும் கடலில் உள்ள தாவர நுண்ணுயிர் (zooxanthellae) அங்கிருந்து வெளியேறி விடும். அதனால், பவளப் பாறைகள் பீளிச்சிங் எனப்படும் வெளுப்புக்கு ஆளாகின்றன.

“இருக்கின்ற வெப்பநிலையில் ஒரு டிகிரி அளவுக்கு அதிகரித்தாலும்கூட பவளப்பாறைகள் வெளுப்புக்கு ஆளாகின்றன. பெரும்பாலும் கோடை காலங்களில் வெப்பநிலை 31 டிகிரிக்கு மேல் அதிகரிக்கும் போது பவளப்பாறைகள் வெளுப்புக்கு ஆளாகின்றன. மன்னார் வளைகுடாவில் 1998, 2002ம் ஆண்டுகளில் பவளப் பாறைகள் வெளுப்புக்கு ஆளாகின. 2005-ம் ஆண்டிலிருந்து கோடை காலத்தில் மன்னார் வளைகுடா பகுதிகளில் உள்ள பவளப் பாறைகள் வெளுப்புக்கு ஆளாவது வாடிக்கையாகி விட்டது. 2007-ம் ஆண்டில் மண்டபம் பகுதிகளில் குறைவாகவும் கீழக்கரை, தூத்துக்குடி பகுதிகளில் அதிகமாகவும் பிளீச்சிங் இருந்தது. வெளுப்புக்கு ஆளாகும் பவளப்பாறைகள் வெப்பநிலை குறைந்ததால், அது அடுத்த இரண்டு மாதங்களில் அது புத்துயிர் பெற்று விடும். சில நேரங்களில், வெளுப்புக்கு ஆளாகும் பவளப்பாறைகளின் உயிர்பை மீட்க முடியாமலும் போய் விடலாம்” என்கிறார் பேட்டர்சன்.

“கடலின் நீர் மட்டம் அதிகரித்து வருவது குறித்து ஐபிசிசி அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடல் நீர் மட்ட உயர்வினால் தண்ணீரின் ஆழம் அதிகரிக்கும். அதனால், பவளப் பாறைகளின் வளர்ச்சிக்குத் தேவையான சூரிய வெளிச்சம் குறையும். அதனால் பவளப் பாறைகளின் வளர்ச்சியும் குறையும். பவளப்பாறைகள் குறைந்தால் கடலோரப் பகுதிகளில் அலைகளின் வேகம் அதிகரிக்கும். கடல் அரிப்பும் அதிகமாகும். பவளப் பாறைகள் அழிக்கப்படுவதால் புயல் பாதிப்புகளும் தீவிரமாகி விடும்” என்கிறார் அவர்.

“பவளப்பாறைகள் கடலுக்குள் இருக்கும் இயற்கையான நர்சரிகள் போல இருக்கின்றன. பல்வேறு கடல்வாழ் உயிரினங்களின் வாழ்விடமாக அவை இருக்கின்றன.
கடலரிப்பைத் தடுப்பதில் பவளப் பாறைகளுக்கு முக்கியப் பங்கு இருக்கிறது. கடலின் வெப்பநிலை உயர்வும் கடல் நீர்மட்ட உயர்வும் பவளப் பாறைகளை அழியும் நிலைக்குக் கொண்டு வந்து விடும். மன்னார் வளைகுடா பகுதிகள் ராமேஸ்வரத்திலிருந்து தூத்துக்குடி வரை 140 கிலோ மீட்டர் தூரத்துக்கு பவளப் பாறைகள் உள்ள 21 குட்டித் தீவுகள் இருக்கின்றன இவற்றில் மண்டம் பகுதியில் உள்ள பூவசரன் பட்டி என்ற சிறிய தீவும் , தூத்துக்குடிப் பகுதியில் விலாங்கிசல்லி என்ற
என்ற சிறிய தீவும் கடலில் மூழ்கியுள்ளன. இது ஒரு எச்சரிக்கை மணி” என்கிறார் மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக ஆய்வு மாணவர் ஜோன்ஸ் தாமஸ் ஸ்பாட்டாகஸ். மன்னார் வளைகுடா பகுதியில் பெங்களூரைச் சேர்ந்த பப்ளிக் அபையர்ஸ் சென்டர் மற்றும் தூத்துக்குடியைச் சேர்ந்த பிஏசி அமைப்புகள் மேற்கொண்ட ஆய்வில் பங்கேற்றவர் இவர். “பவளப் பாறைகள் அழிந்து வருவதால் மீனவர்களின் வாழ்வாதாரம் பெரிதும் பாதிக்கப்படும். எனவே, பவளப்பாறைகளைப் பாதுகாக்க அரசு தரப்பில் உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டியது அவசியம்” என்கிறார் பப்ளிக் அபையர்ஸ் சென்டர் ஒருங்கிணைப்பாளர் ஜெங்கால் ஜெயராமன்.

“இந்தப் பகுதிகளில் உள்ள கடல் பகுதிகளில் கடல் பாசி சேகரிக்கும் தொழிலில் மீனவர்கள் ஈடுபட்டுள்ளனர். இயற்கை முறையில் கடல் பாசிகளை சேகரிக்கும் இந்தப் பணியில் மீனவப் பெண்களும் ஈடுபட்டு வருகிறார்கள். கடல் பாசிகள் (Sea Weed) கடல் உணவை உருவாக்குவதில் முக்கியப் பங்கு வகிக்கிறது. கடலில் கலக்கும் மாசுகளையும் ஈர்க்கக் கூடியவை. அத்துடன் கார்பன் டை ஆக்ஸ்டை ஈர்த்து கடலின் வெப்பநிலையையும் குறைக்கின்றன. மன்னார் வளைகுடா பகுதியில் 150 வகையான கடல் பாசிகள் உள்ளன. இவை மொத்தம் 8.7 லட்சம் டன் அளவுக்கு இருக்கின்றன. ஆண்டுக்கு 22 ஆயிரம் டன் அளவுக்கே இந்த பாசிகள் எடுக்கப்படுகின்றன. ஆனால், இப்போது இந்தப் பகுதியில் அண்மைக் காலங்களில் இந்தக் கடல் பகுதியில் அறிமுகபபடுத்தப்பட்ட பிலிப்பின்ஸை சேர்ந்த Ôகப்பாபைகஸ் ஆல்வரேசி’ (kappaphycus alverizii) என்ற அயல் நாட்டு கடல்பாசி ஊடுருவி வருகிறது. இந்தப் பாசிகள் பவளப் பாறைகளில் படிந்து அவற்றின் சுவாசத்தை தடுத்து நிறுத்தி அதற்கு பெரிய பாதிப்பை ஏற்படுத்துகின்றன. அத்துடன், மீனவர்களின் வாழ்வாதாரங்களும் பாதிக்கப்படுகின்றன. இந்த Ôகப்பாபைகஸ் ஆல்வரேசி’ பாசிகளிடமிருந்து பவளப் பாறைகளைக் காப்பதற்கான நடவடிக்கைகள் எடுக்காவிட்டால் பவளப் பாறைகளின் அழிவைத் தடுக்க முடியாது” என்கிறார் பேட்டர்சன்.

“மே மாதம் முதல் ஆகஸ்ட் மாதம் வரை பெய்யும் வடகிழக்குப் பருவமலை காரணமாக தண்ணீர் கடலில் சேருவதாலும் ஏப்ரல் 15-ம் தேதி முதல் மே 31-ம் தேதி வரை கடலில் மீன் பிடிப்பதற்கு விதிக்கப்பட்டுள்ள தடையும் பவளப் பாறைகளை பாதுகாக்க ஓரளவு உதவுகின்றன. கடல் நீர் வெப்பமடைதல் பவளப் பாறைகளின் அழிவுக்கு முக்கிய காரணமாக இருந்தபோதிலும் கடலோரப் பகுதிகளில் நடைபெறும் விரிவாக்கப் பணிகள், கடந்த காலங்களில் அதாவது 2005-க்கு முன்னதாக நடந்த பவளப்பாறைகளைத் தோண்டி எடுத்தல் போன்ற முறையற்ற செயல்பாடுகள், தொழிற்சாலைகளின் கழிவுகள் நேரடியாக கடலுக்குள் விடப்படுதல், அதனால் கடல் அமிலத் தன்மை அடைதல் போன்றவைகளும் பவளப்பாறைகளின் அழிவுக்குக் காரணமாக இருக்கின்றன, இதனால், கடல் பவளப்பாறைகளை வாழ்வாதாரமாகக் கொண்டு கடலில் வாழும் ஏராளமான நுண்ணுயிர்களும் இதனால் அழிந்து விடும் அபாயம் உள்ளது. வளிமண்டலத்தில் கார்பன் டை ஆக்ஸ்டைடு வாயுவின் அளவைக் குறைத்து சுற்றுச்சூழலை மேம்படுத்துவது, தொழிற்சாலைக் கழிவுகள் கடலில் கலப்பைத் தடுப்பது. பவளப் பாறைகளை முறைகேடாக வெட்டி எடுப்பதைத் தடுப்பது, கடலில் வெடிவைத்து மீன் பிடிப்பது போன்றவற்றைத் தடுக்க வேண்டியது அவசியம்” என்று யோசனை கூறுகிறார் அவர்.
.
ஒரு சதுர கிலோ மீட்டருக்கு நல்ல பவளப் பாறைகள் இருந்தால், மீன் பிடித்தல் உள்ளிட்ட பல்வேறு சேவைகள் மூலம் ஆண்டுக்கு ஒரு லட்சம் டாலர் முதல் 6 லட்சம் டாலர் வருவாய் கிடைக்கும் என்று ஐக்கிய நாடுகள் அமைப்பான கூறியுள்ளது. கடல் மீன் வளத்திற்கும் சுற்றுச்சூழல் பாதுகாப்புக்கும் மீனவர்களின் வாழ்வாதாரத்திற்கும் பவளப் பாறைகள் முக்கியத்துவம் வாய்ந்தவை. அத்துடன், பவளப் பாறைகள் கடலோரப் பகுதிகளுக்கு இயற்கை தந்த பாதுகாப்பு அரண். எனவே, பவளப் பாறைகளைப் பாதுகாக்க இப்போதாவது முழு கவனம் செலுத்தி செயல்பட வேண்டிய நேரம் இது. It is better, late than never.

Puthiyathalaimurai (11-04-2013 )

Due to climate change impact, Honey bees desert forest: Honey production declines in Nilgiris

குறையும் தேன் உற்பத்தி…கசக்கும் உண்மைகள்…

மழை பெய்வதில் ஏற்படும் மாற்றங்கள் காரணமாக நீலகிரி மலைப் பகுதியில் கிடைக்கும் தேன் அளவு கடந்த சில ஆண்டுகளாகக் குறைந்து வருகிறது. பருவநிலை மாற்றம் காரணமாக, அந்தப் பகுதிகளுக்கு இனப்பெருக்கம் செய்ய வரும் தேனீக்கள் வேறு இடங்களுக்கு இடம் பெயர்ந்து விடுகின்றன.

——

பேச்சி. ஐந்து தலைமுறைக்கு முன்னதாக விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு அருகே உள்ள மலைப் பகுதியைச் சேர்ந்த தேன் எடுக்கும் பெண். மலையின் உச்சிக்குச் சென்று அங்கிருந்து கயிறு கட்டித் இறங்கி அங்கு பாறைகளுக்கு இடையே அடையாக இருக்கும் தேன் கூட்டிலிருந்து தேன் எடுத்து வந்து விடுவாள். மலைப் பகுதியில் யாரும் எட்ட முடியாத உயரத்தில் இருந்த தேன் அடையிலிருந்து தேன் எடுக்க முடியுமா? என்று கேட்டனர் அந்தப் பகுதியைச் சேர்ந்த சில ஆண்கள். அங்கிருந்தவர்களுடன் சவால் விட்டு, அந்த மலை உச்சியில் பாறையில் இருந்த தேன் கூட்டிலிருநது தேனை எடுத்து வந்தாள் பேச்சி. இதனால், பொறாமை கொண்ட அவர்கள், மலையில் தேன் எடுக்க பேச்சி கயிற்றைப் பிடித்துக் கொண்டு இறங்கும் போது, கயிற்றை அறுத்து விட்டனர். அதனால் அங்கிருந்து கீழே விழுந்து இறந்து போனாள். அந்த இடம் பேச்சியின் நினைவாக, பேச்சிக்கேணி என்று அழைக்கப்படுகிறது. அந்த இடத்திற்கு தேன் எடுக்க வரும் ஆண்களை பேச்சியின் ஆவி மிரட்டுவதாக ஐதீகம். அதனால், அங்கு தேன் எடுக்க வருபவர்கள் பேச்சியை, தெய்வமாக வழிப்பட்டு விட்டு தேன் எடுக்கச் செல்லத் தொடங்கினர். இது நாட்டுப்புறக் கதை. ஆனாலும், அந்தக் காலத்தில் மலையேறி தேன் எடுப்பதில் பெண்களின் பங்களிப்பைக் காட்டுவதாக உள்ளது. ஆனால், தற்போது ஆண்களே மலைப் பகுதிகளுக்குச் சென்று தேன் எடுக்கும் தொழிலில் ஈடுபடுகிறார்கள். கடந்த சில ஆண்டுகளாக அவர்களுக்குக் கிடைத்து வரும் தேனின் அளவு குறைந்து வருகிறது. இதற்கு, அந்தக் கால பேச்சியின் சாபம் காரணமல்ல. மழை பெய்வதிலும் வெப்பநிலையிலும் ஏற்பட்டுள்ள மாற்றம் காரணமாக அங்கு கிடைக்கும் தேன் அளவு குறைந்து வருகிறது என்கிறது அறிவியல் ஆய்வுகள்.

நீலகிரி, சத்தியமங்கலம், ஆனைமலை, பழனி, வருஷநாடு, ஆனைமலை, சதுரகிரிமலை, பச்சைமலை, கல்வராயன் மலை, ஜவ்வாது மலை, கொல்லிமலை, சேர்வராயன் மலை…இப்படி பல்வேறு மலைப்பகுதிகளில் தேன் எடுக்கும் பணிகளில் ஆதிவாசிகள் ஈடுபட்டுள்ளனர். நீலகிரி பகுதியில் குரும்பர், இருளர், கசவர், சோளிகர், ஜெனு குரும்பர், காட்டு நாயககர், பதினா நாயக்கர், சோள நாயக்கர், தொதுவர், மனசர், காடர் போன்ற பழங்குடி இனத்தைச் சேர்ந்த ஆதிவாசிகள் 18 ஆயிரம் பேர் இருக்கிறார்கள். அவர்களில் ஆயிரத்து ஐந்நூறு பேர் வரை இந்த தேன் எடுக்கும் பணிகளில் ஈடுபடுகிறார்கள். தேன் எடுக்க ஆதிவாசிகள் நான்கு ஐந்து பேராகச் செல்வார்கள். அதில் தேன் எடுக்கச் செல்பவருக்கு ஆண்டுக்கு ரூ.20 ஆயிரம், ரூ.22 ஆயிரம் அளவுக்கு வருமானம் கிடைக்கும். அவருடன் உதவிக்காக செல்வபவர்களுக்கு பத்தாயிரம் ரூபாயிலிருந்து 15 ஆயிரம் ரூபாய் வரை கிடைக்கும். இந்தத் தேன் எடுக்கக் காட்டுப் பகுதிகளில் இரண்டு மூன்று மாதங்களில் குறைந்தது 45 நாட்களாவது இதற்காக செலவிட வேண்டியதிருக்கும். தேன் எடுக்கச் செல்லும் போது தேன் எவ்வளவு கிடைக்கும் என்று பார்த்துக் கொண்டு செல்ல முடியாது. தேன் எடுத்த பிறகுதான் எவ்வளவு வருவாய் கிடைக்கும் என்பது தெரியவரும். தேன் கிடைப்பதில் வருமானம் குறைந்தால் தேன் எடுப்பவர்களின் வாழ்நிலை பாதிக்கப்படும். ஆண்டு முழுவதும் இந்த வேலை இல்லை என்பதால், மற்ற காலங்களில் விவசாயக் கூலி வேலை போன்ற வேறு வேலைகளுக்குச் சென்று விடுகிறார்கள். ஜனவரியிலிருந்து மே மாதம் வரை நிலத்திலிருந்து வருவாய் கிடைக்காத காலம். இந்தக் காலங்களில் தேன் சேகரிப்பு அவர்களுக்கு முக்கிய வருவாயாக உள்ளது.

“நீலகிரியில் கடந்த இரண்டு மூன்று ஆண்டுகளாக தேன் உற்பத்தி அளவு குறைந்து வருகிறது. நீலகிரி பகுதியில் வழக்கமாக ஆண்டுக்கு எட்டு டன் அளவுக்கு தேன் கிடைக்கும் ஆனால், கடந்த ஆண்டு மூன்றரை டன் அளவுக்குத்தான் தேன் கிடைத்தது. இந்த ஆண்டும் கடந்த ஆண்டு நிலைமைதானா என்பதைப் பொருந்திருந்து பார்க்க வேண்டும்” என்கிறார் நீலகிரியில் உள்ள கீ ஸ்டோன் ஃபவுண்டேஷன் அமைப்பின் திட்ட ஒருங்கிணைப்பாளரான ராபர்ட் லியோ. இந்தப் பகுதியில் உள்ள தேன் எடுக்கும் ஆதிவாசிகளுடன் இணைந்து செயல்படும் இந்த அமைப்பைச் சேர்ந்த அவர், `இந்தப் பகுதியில் தேன் உற்பத்தி குறைந்து வருவதற்கு பருவநிலை மாற்றமும் ஒரு முக்கியக் காரணம்’ என்கிறார்.

“நமது நாட்டில், மலைத் தேனீ, அடுக்குத் தேனீ, கொம்புத் தேனீ, கொசுந்தேனீ ஆகிய நான்கு வகைத் தேனீக்கள் உள்ளன. இதில் அடுக்குத் தேனீயும் கொசுந்தேனீயும் மரப்பொந்துகள், சுவர்கள், கிணற்றின் ஓரங்கள், கூரைகள் போன்ற இருட்டான பகுதிகளில் குடியிருக்கும். மலைத்தேனீக்களும் கொம்புத்தேனீக்களும் சீசனுக்கு சீசன் இடம் மாறக்கூடியவை. மலைத்தேனீக்கள் உயரமான பகுதிகளில் பாறைகளுக்கு இடையே ஒரே அடையாகக் கட்டும். ஒரு கூட்டிலில் ஒரு லட்சத்திலிருந்து ஒன்றரை லட்சம் தேனீக்கள் வரை இருக்கும். அதன் ஒரு கூட்டிலேயே 4 முதல் 20 கிலோ வரை தேன் கிடைக்கும்.

பிப்ரவரி கடைசியிலோ அல்லது மார்ச் முதல் வாரத்திலோ மழை பெய்ய வேண்டும். அப்போதுதான் காடுகளில் பூக்கள் பூக்கத் தொடங்கும். அந்தக் காலத்தில் மார்ச் முதல் வாரத்திலிருந்து மலைத்தேனீக்கள் கூடு கட்டி குடியிருக்கத் தொடங்கும். ஏப்ரல் கடைசியிலிருந்து ஜூன்-ஜூலை மாதங்கள் வரை தேன் எடுக்கலாம். பெட்டிகளில் வளர்க்கப்படும் தேனீக்களில் நவம்பர் மாதத்தில் தேன் கிடைக்கும். போன வருஷம் நீலகிரி பகுதியில் குன்னூர், குந்தா, மஞ்சூர் போன்ற பகுதிகளில் மழை இல்லை. இதனால் அங்குள்ள காட்டுப் பகுதிகளில் பூக்கள் மலருவதில் ஏற்பட்ட தாமதம் காரணமாக, தேனீக்களுக்கு உணவான மகரந்தத் தூளும் மகரமும் போதிய அளவு கிடைக்கவில்லை. அதனால், தேனீக்கள் வேறு இடங்களுக்குப் போய்விட்டன. அதனால் தேன் கிடைப்பது கணிசமாகக் குறைந்து விட்டது. வழக்கமாக ஒரு அடைக்கு 8 கிலோ முதல் 10 கிலோ வரை கிடைக்கும் மலைத்தேன் இரண்டு மூன்று கிலோவாகக் குறைந்து விட்டது. பெட்டிகளில் வளரக்கப்படும் தேனும் பத்துக் கிலோவிலிருந்து ஓன்றரைக் கிலோவாகக் குறைந்து விட்டது. பெட்டிகளில் வளர்க்கப்படும் தேனீக்களில் தேன் எடுக்கும் காலம் ஏப்ரல் முதல் ஜூன் வரை. இரண்டாம் கட்டமாக நவம்பர் மாதத்தில் தேன் கிடைக்கும். ஆனால் கடந்த நவம்பரில் பெட்டிகளில் தேன் இல்லை. ஆனால் ஜனவரியில் தேன் இருந்தது. இது வழக்கத்துக்கு மாறானது. மழை முறை தவறிப் பெய்வதாலும் மழை அளவு குறைவதாலும் இந்த நிலைமை” என்கிறார் அவர்.

“மழை பெய்வதில் தாமதமானால், விதை விதைப்பு தாமதமாகிறது. பயிர் சாகுபடி நேரங்களில் கனமழையோ அல்லது தொடர் மழையோ இருந்தாலும் பயிர் பாதிக்கப்படும். பூ பூக்கும் காலத்தில் மழை பெய்தால் பூக்களில் உள்ள மகரம் நீர்த்துப் போகலாம். அது தேனீக்களுக்கு உவப்பாக இருக்காது. மலைத் தேனீக்களும் கொம்புத் தேனீக்களும் குறிப்பிட்ட காலத்தில் மலைப் பகுதிகளில் கூடு கட்டி இனப்பெருக்கம் செய்யும். ஏப்ரல், மே மாதங்களில் மழை பெய்தாலும் தேனீக்களின் இனப்பெருக்கம் பாதிக்கப்படும். தனது உணவுக்காக பூக்களிலிருந்து மகரந்தத் தூளையும் மதுரத்தையும் தேனீக்கள் சேர்த்து வைக்கும். வெப்பம் அதிகம் இருந்தால் மண்ணில் ஈரத்தன்மை குறைந்து, செடி, கொடிகள் வாடிவிடும். அதிகப்படியான வெப்பம் இருந்தால் பூவிலிருக்கும் மதுரம் ஆவியாகிவிடும். இதனால் பூக்களிலிருந்து தேனீக்களுக்குத் தேவையான அளவு மதுரம் கிடைக்காது. 500 மீட்டர் தொலைவுக்குள் தண்ணீர் இருக்கும் பகுதிகளில்தான் மலைத்தேனீகளின் அடைகளைப் பார்க்க முடியும். மழை இல்லாமல் போகும் நிலையில் தண்ணீர் இல்லாமல் வெப்பநிலையும் அதிகமாக இருந்தால் இந்தத் தேனீக்கள் சமவெளிப் பகுதிகளுக்கு இடம் பெயர்ந்து விடும்” என்கிறார் அவர் மேலும்.

“மழை மாறி பெய்வதால் பூக்கள் பூக்கும் காலம் மாறும். இதற்கிடையே, இங்குள்ள தேனீக்கள் வேறு இடங்களுக்கு இடம் பெயர்ந்து விடுகின்றன. வெப்பம் அதிகம் இருந்தாலும் தேனீக்கள் வேறு இடத்துக்குப் போய் விடும். அதனால் தேன் உற்பத்தி குறைந்து விடுகிறது” என்கிறார் சத்தியமங்கலம் வனப்பகுதியில் உள்ள தடசலட்டி கிராமத்தைச சேர்ந்த தேன் எடுக்கும் பணியில் ஈடுபட்டு வரும் ரங்கசாமி. “மழை சரியில்லாததால்தான் தேன் உற்பத்தி குறைந்து வருகிறது. ஒரு காலத்தில் ஒரு கூட்டில் கிடைத்த தேனில் பாதியளவு கூட இப்போது கிடைக்கவில்லை. இதற்கெல்லாம் பருவநிலை மாற்றம்தான் காரணம்” என்கிறார் அதேபகுதியில் நான்கு தலைமுறைகளாக தேன் எடுக்கும் பணியில் ஈடுபட்ட பழங்குடினர் குடும்பத்தைச் சேர்ந்த மாரி (வயது72).

“ஜவ்வாது மலைப் பகுதிகளில் கிடைக்கும் தேனின் அளவும் பாதிக்கு மேல் குறைந்து விட்டது. பெட்டிகளில் வளர்க்கப்படும் அடுக்குத் தேனீக்களிடமிருந்தும் கிடைக்கும் தேனின் அளவும் குறைந்து விட்டது. அதற்கான காரணம் புரியவில்லை” என்கிறார் அந்தப் பகுதியில் தேனீக்கள் வளர்ப்புப் பணியில் நீண்ட காலமாக இருக்கும் லோகநாதன். இந்தப் பகுதியில் சந்தன மரங்கள் பெருமளவில் வெட்டப்பட்டுள்ளதால் அங்கு தேனின் அளவு குறைந்து விட்டது என்கிறார்கள் சிலர்.

“முன்பு, விவசாயிகள் தங்களது நிலத்தில பல வகையான பயிர்களைப் பயிர் செய்வார்கள். தற்போது, தங்களுக்குரிய நிலங்களில் ஓரின பயிர்களை சாகுபடி செய்கிறார்கள். இதனால், மகரந்தம் குறைந்து தேன் உற்பத்தியும் பாதிக்கப்படுகிறது. காடுகள் அழிக்கப்படுதல், நிலப் பயன்பாடு மாற்றம், விவசாயத்துக்குப் பூச்சிக் கொல்லிகளைப பயன்படுத்துதல் போன்ற காரணங்கள்கூட தேனை உற்பத்தி செய்யும் தேனீக்கள் கூட்டங்களின் வளர்ச்சிக்கு தடையாக இருந்தாலும்கூட, பருவநிலை மாற்றம முக்கியக் காரணங்களில் ஒன்றாகத் திகழ்கிறது. மழை தவறிப் பெய்யும் போது தேனீக்கள் இடம் பெயர்கின்றன. அதேபோல, வெப்பநிலை அதிகரிக்கும்போதும், இடம் பெயர்கின்றன என்பதை இந்தப் பகுதியில் தேன் எடுப்பவர்கள் கண்களால் பார்த்து உணர்ந்திருக்கிறார்கள். தேன் உற்பத்தியில் ஈடுபடும் தேனீக்களுககு மகரந்த சேர்க்கையில் 69 சதவீதப் பங்கு இருக்கிறது. தாவர இனப் பெருக்கத்துக்கான அயல் மகரந்த சேர்க்கைக்கு தேனீக்கள் உதவியாக இருக்கின்றன. தேனீக்களின் வரத்து குறையும் போது தாவர இன உற்பத்தியும் பாதிக்கப்படும்” என்று கூறுகிறார் லியோ ராபர்ட்.

“தேனீக்கள் உலகிலிருந்து மறைந்து விட்டால், அதன் பிறகு மனிதர்களுக்கு மிச்சமிருப்பது நான்கு ஆண்டு வாழ்க்கைதான்” என்றார் ஐன்ஸ்டீன். பருவநிலை மாற்றத்தின் தாக்கங்கள் பல்வேறு நிலைகளில் நேரடியாக தெரிய ஆரம்பித்து விடடது. அதற்கு மற்றொரு உதாரணம் தேன். இது கசக்கும் உண்மை.

Puthiyathalaimurai (25-04-2013)

Effect of climate change on the loss of False Travally (Lactaries lactarus) fishery in the Gulf of Mannar

Summary: In the Gulf of Mannar region, extending upto kanyakumari, the coastal population enjoy False Trevally (Lactarius lactarius) fish as delicacy .Locally, they call them as kudhipu, Sudumbu or kadumbu. In this region, gradual decrease in rainfall and rise in temperature over the years has played a key role in the decrease of this fish catch which reduced the income of the small scale fishermen, according to a study conducted by Suganthi Devadason Marine Research Institute, Tuticorin. Fishermen were able to catch these fishes within 5 miles from the shore during 1980’s but today, they are able to obtain only few kilograms of the fish even after traveling up to 40 to 50 nautical miles. As for the country crafts, there has been no catches. The fishermen of the Tuticorin coast are still discussing the possible reasons for the depletion of the fish stock.
Puthiyathalaimurai (23-05-2013 )

உயரும் வெப்பநிலை! குறையும் குதிப்பு மீன்!

தூத்துக்குடியிலிருந்து கன்னியாகுமரி வரை உள்ள கடற்கரைப் பகுதியில் உள்ள மீனவர்களுக்கு நல்ல வருவாய் அளித்து வந்த குதிப்பு மீன் தற்போது அரிதாகிவிட்டது. குதிப்பு மீன் மூலம் நல்ல வருவாய் ஈட்டி வந்த இந்தப் பகுதி மீனவர்கள், இந்த மீன் வரத்து குறைந்ததற்குக் காரணம் தெரியாமல் திகைக்கின்றனர். பருவநிலை மாற்றம் காரணமாக கடலின் வெப்பநிலை உயர்வு, இந்த மீன்களை இடம் பெயரச் செய்து விட்டது என்கிறார்கள் ஆய்வாளர்கள்.

“குதிப்பு மீன்னா நல்ல ருசி. இதுக்காகவே இதுக்கு நல்ல விலை கிடைக்கும். ஒரு காலத்தில இங்க மீன் பிடிக்க போனோம்னா ஏராளமான குதிப்பு மீன் கிடைக்கும். இப்ப அதைப் பார்ப்பதே அரிதாகி விட்டது” என்கிறார் தூத்துக்குடி தெற்கு கடற்கரையை சேர்ந்த 87 வயதான மீனவர் பெர்னார்ட். தூத்துக்குடி பகுதியிலே இந்த மீனை குதிப்பு என்கிறார்கள். ராமேஸ்வரம் பகுதியில் இந்த மீனை சுதும்பு என்கிறார்கள். இந்த மீனுக்குக் கடும்பு என்றும் பெயர். ஆங்கிலத்தில் ஃபால்ஸ் டிரவெலி (False Trevally) இதன் அறிவியல் பெயர் Lactarius lactarius. பெயர்தான் வேறு என்றாலும் கூட, இதன் ருசியே தனி. இந்த ருசிக்காகத்தான் மற்ற மீன்களை விட விலையும் அதிகம். அதிக அளவில் ஏற்றுமதியும் ஆகும் வகை மீனும்கூட. அதனால்தான், நல்ல விலை போகக்கூடிய இந்த மீன்களைப் பிடிப்பதில் மீனவர்கள் ஆர்வம் காட்டினார்கள். கடலில் 10 மீட்டர் ஆழத்தில் சேறு சகதி உள்ள இடங்களில்தான் இந்த மீன் கிடைக்கும். ராமேஸ்வரத்திலிருந்து கன்னியாகுமரி வரை இந்த மீன் கிடைக்கும். 30 செமீ அளவுள்ள இந்த மீன் வேகமாக நீந்திச் செல்லக்கூடியது. இவை, காலை 7 மணியிலிருந்து பத்து மணி வரையிலும் இரவு 6 மணியிலிருந்து 8 மணியிலும் வலையில் சிக்கும்.

“ஒரு காலத்தில் டன் கணக்கில் கடற்கரைக்கு வந்து கொண்டிருந்த குதிப்பு மீன், தற்போது 10 கிலோ, 15 கிலோ அளவுக்குத்தான் கிடைக்கிறது” என்கிறார் 25 ஆண்டுகளாக இந்தப் பகுதியில் மீன் பிடி தொழிலில் ஈடுபட்டு வரும் செல்வம். “இப்ப பாறை, களவாய் சிங்க இறால் போன்ற மீன்கள் வரத்துகூட குறைந்து வருகிறது” என்கிறார் அவர். சீசன் நேரத்தில் ராமநாதபுரம் பகுதியில் ஒரு நாளைக்கு 6 முதல் 8 டன் வரையும் தூத்துக்குடியில் ஒரு நாளைக்கு 10 டன் வரையும் இந்த மீன் கிடைத்து வந்தது. தமிழ்நாட்டிலும் கேரளத்திலும் இந்த மீனுக்கு கிராக்கி அதிகம். எனவே, இந்த மீன் ஏற்றுமதி மூலம் நல்ல பணம் பார்த்த மீனவர்கள் பலர். இப்போது இந்த மீன் வரத்து குறைந்து விட்டதால், விலை குறைந்த மற்ற மீன்களை நம்பி இருக்கும் நிலைக்கு ஆளாகியுள்ளனர் என்கிறார்கள் அந்தப் பகுதி மீனவர்கள்.

“ஒரு காலத்தில் நாட்டுப் படகுகளில் போகிறவர்களுக்கு நிறைய குதிப்பு மீன் கிடைத்து வந்தது. அப்புறம், நாட்டுப் படகுகளில் செல்பவர்களுக்கு குதிப்பு மீன் கிடைக்காத நிலை ஏற்பட்டது. அந்த காலத்தில், விசைப் படகுகளுக்கு அதிகமாகக் கிடைத்து வந்த குதிப்பு மீன், தற்போது அவர்களுக்கும் எப்போதாவதுதான் கிடைக்கிறது. அதற்கும் அவர்கள் கடலில் நீண்ட தூரம் செல்ல வேண்டியதிருக்கிறது” என்கிறார் ரேஷ்புரம் நாட்டுப் படகு பொது பஞ்சாயத்துத் தலைவர் ஆர்.ராஜ். குதிப்பு மட்டுமல்ல, ஐயலை, வாழை, சாலை போன்ற மீன்களின் வரத்தும் குறைந்து விட்டது. ஓரு காலத்தில், இந்த மீன்களின் வாழ்விடங்களாகத் திகழ்ந்த பவளப் பாறைகளை எடுத்து வீடு கட்டப் பயன்படுத்தினார்கள். இதற்கு சட்டரீதியான தடை விதிக்கப்பட்டுள்ளதால், இதெல்லாம் தற்போது இல்லை. ஜூன், ஜூலை, ஆகஸ்ட் மாதங்களில் இந்த மீன்கள் கிடைக்கும். கடலில் மீன்கள் குஞ்சு பொறிக்கும் காலமான ஏப்ரல் 15-ம் தேதியிலிருந்து மே 30-ம் தேதி வரை கடலில் மீன் பிடிக்க அனுமதி கிடையாது என்ற நடைமுறை அமலில் உள்ளது. இருந்தாலும், காலப்போக்கில் இந்த குதிப்பு மீன் வரத்து மிகவும் குறைந்து விட்டது.

இந்த நிலையில், தூத்துக்குடியையொட்டிய தெற்கு கடலோரப் பகுதிகளில் குதிப்பு மீன் வரத்துக் குறைந்து வருவதற்கான காரணங்களை தூத்துக்குடியில் உள்ள சுகந்தி தேவதாசன் கடல் ஆராய்ச்சி இன்ஸ்டிட்யூட் விஞ்ஞானிகள் ஆராய்ச்சி மேற்கொண்டனர். “தமிழ்நாடு கடற்கரையோரத்தில் 1973ம் ஆண்டில் 1822 டன் கிடைத்தது, 1993-ல் இந்த எண்ணிக்கை 175 டன் ஆகக் குறைந்து விட்டது. குதிப்பு மீன் கிடைப்பதே அரிதாகிப் போய் விட்டதற்கு காரணம் என்ன என்று தெரியாமல் முழிக்கிறார்கள். இதற்கு அடுத்த ஆண்டுகளில் இந்த மீன் வரத்து எவ்வளவு என்பதற்கான புள்ளி விவரங்கள் தெரியவில்லை. 1980ம் ஆண்டுகளில் 5 மைல் தூரத்திற்குள் இந்த மீன் கிடைத்தது. தற்போது, 40 அல்லது 45 நாட்டிக்கல் மைல் தூரத்திற்குச் சென்றால் கூட சில கிலோ மீன்கள்தான் கிடைக்கின்றன. முன்பெல்லாமல் டிசம்பர் முதல் மார்ச் வரையிலான சீசன் நேரத்தில் ஒரு படகில் மட்டுமே அரை டன்னிலிருந்து ஒன்றரை டன் வரை குதிப்பு மீன் கிடைக்கும். ஆனால் 300க்கு மேற்பட்ட விசைப் படகுகள் உள்ள தூத்துக்குடி மீன்பிடி துறைமுகத்தில் ஓட்டு மொத்த சீன் முழுவதும் 150 கிலோ அளவுக்குத்தான் மீன் கிடைக்கிறது. நாட்டுப் படகுகளுக்கு இந்த மீன் கிடைப்பதே இல்லை என்பதுதான் இன்றைய யதார்த்தம்” என்கிறார் ககந்தி தேவதாசன் கடல் ஆராய்ச்சி இன்ஸ்டிட்யூட் இயக்குநர் ஜே.கே. பேட்டர்சன் எட்வர்ட்.

“தடை செய்யப்பட்ட வலைகளைப் பயன்படுத்துவதாலும் குஞ்சு பருவத்திலேயே மீன் பிடிக்கப்படுவதாலும் இந்த மீன் இனம் குறைந்து வருகிறது. அத்துடன், மீன்களின் வாழ்விடமான பவளப் பாறைகளும் கடற் புற்களும் பாதிப்புக்கு உள்ளாகி வருகின்றன. இதனால், இந்தக் கடல் பகுதியில் இருந்த குதிப்பு மீன்கள் ஆழமான வேறு பகுதிகளுக்கு இடம் பெயர்ந்து விட்டன. இந்த மீன் வரத்துக்கு குறைவுக்கு மனிதர்கள் மட்டுமல்ல பருவநிலை மாற்றமும் ஒரு முக்கியக் காரணம். கடல் பகுதி சுற்றுச்சூழல் மேம்பாட்டில் மழை நீர் முக்கியப் பங்கு வகிக்கிறது. தூத்துக்குடிக் கடல் பகுதியில் முறையான மழை இல்லை. புன்னக்காயல் அருகே கடலில் கலக்கும் தாமிரவருணி ஆற்றில் ஆண்டு முழுவதும் தண்ணீர் வருகிறது. இப்பகுதியில் உள்ள மற்றொரு ஆறான வைப்பாறு வரண்டு விட்டது. சிறிய நதிகளான கள்ளாறு, வேம்பாறு ஆகியவற்றிலும் தண்ணீர் இல்லை. இந்தப் பகுதிகளில் மழை அளவு குறைந்து வருவதால் ஆறுகளிலிருந்து கடலில் கலக்கும் நீரின் அளவு குறைந்து வருகிறது. அத்துடன், இந்த ஆறுகளின் குறுக்கே அமைக்கப்பட்டுள்ள தடுப்பு அணைகளும் கடலுக்கு வரும் தண்ணீரின் அளவைக் குறைத்து விடுகிறது. கடலில் கலக்கும் ஆற்று நீரில் உள்ள ஊட்டச்சத்துகள் மீன்களுக்கு உணவாக இருக்கும். தண்ணீர் வரத்து குறைவினால் கடலில் உள்ள மீன்களுக்கான ஊட்டச்சத்து போதிய அளவில் கிடைப்பதில்லை. இதனாலும் மீன்கள் இடம் பெயரும் நிலை உருவாகிறது. அக்டோபர், நவம்பர் டிசம்பர் மாதங்களில் மழை காலம். இந்த அக்டோபரில் நல்ல மழை கிடையாது. மழை அளவு குறைந்து வருகிறது. அத்துடன், கடலின் வெப்பநிலையும் அதிகரித்து வருகிறது. இதனால், குறிப்பிட்ட வெப்ப நிலையில் கடல் நீரில் வாழக்கூடிய குதிப்பு மீன் இடம் பெயரத் தொடங்கியுள்ளது. இதுபோல, கடல்நீரில் ஏற்படும் வெப்பநிலை மாற்றங்கள் காரணமாக வேறு வகையான மீன்களும் இடம் பெறக்கூடும் சாத்தியங்கள் உள்ளன” என்கிறார் பேட்டர்சன்.

பருவநிலை மாற்றம் என்பது கண்ணுக்குத் தெரியாமல் புள்ளி விவரங்களில் புதைந்து கிடப்பதாகக் கருத வேண்டாம். அதன் விளைவுகள் கண்ணுக்குத் தெரியத் தொடங்கி விட்டன. அதற்கு ஒர் எடுத்துக் காட்டுதான் குதிப்பு மீன். “கடந்த 40 ஆண்டுகளில் இந்தியக் கடல் நீரில் 0.5 டிகிரி செல்சியஸ் அளவுக்கு வெப்பநிலை உயர்ந்துள்ளது. இதனால் கடல் பகுதியில் இருந்த மீன்கள் வேறு பகுதிகளுக்கு இடம் பெயர்ந்துள்ளன என்று கூறியுள்ளார்” இந்திய வேளாண் ஆராய்ச்சிக் குழுமத்தின் தேசிய ஒருங்கிணைப்பாளர் அகர்வால். அது குதிப்பு மீன் விஷயத்திலும் உண்மையாகி வருகிறது. காலப்போக்கில் மற்ற வகை மீன்களுக்கும் தொடரலாம். எனவே, தும்பை விட்டுவிட்டு வாலைப் பிடிக்கும் நிலைமை தொடர வேண்டாம்!

Failing monsoon: Will drought continue in Tamil Nadu?

The climate change impact is faster than expected and Tamil Nadu is not an exception. This year, Tamil Nadu is facing a severe drought and the rice producing districts are worst affected. Due to changes in the rainfall pattern, this may continue in coming years also. The centre for climate change and adaptation research, Anna University is  doing a study on Climate change impact assessment, one of the first ever initiative in Tamil Nadu. This study shows the changing pattern of rainfall and temperature in Tamil Nadu. So, the farmers has to adopt new strategies to face the future challenges. This story is about the research findings on climate change in Tamil Nadu.

Pon Dhana story on rainfall pattern in TN